லாபத்தை அள்ளித் தரும் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

லாபத்தை அள்ளித் தரும் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!
Updated on

ரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிக லாபத்தைத் தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது மரவள்ளிக் கிழங்கு சீசன் என்பதால் விளைவிக்கப்படும் மரவள்ளிக் கிழங்கு நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதோடு, சாகுபடி செய்யப்படும் அனைத்தும் கொள்முதல் செய்யப்படுவதால் அதிக லாபம் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் தெரிவிக்கையில், “மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நல்ல வர்த்தகமாக இருக்கிறது. மரவள்ளிக் கிழங்கின் மூலம் சிப்ஸ், மாவு, ஜவ்வரிசி போன்றவை தயாரிக்கப்படுவதால் இவை அதிகமாக ஆலைகளுக்குத் தேவைப்படுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கு அனைத்து காலத்திலும் தேவைப்படும் பொருளாக மாறி இருக்கிறது.

மேலும், மரவள்ளிக் கிழங்கு அனைத்து காலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற பயிர். பாசன வசதி இருக்கும் பட்சத்தில் விவசாயிகள் அச்சமின்றி மரவள்ளிக் கிழங்கை சாகுபடி செய்யலாம். அதேசமயம் மாணாவரி காலமான மே மற்றும் ஜூன் மாதங்களில் நடவு செய்வது கூடுதல் பலனைத் தரும். செம்மண் மற்றும் கரிசல் மண் நிலங்களில் மரவள்ளிக் கிழங்கை பயிரிடுவது சிறந்ததாகும். அதுமட்டுமின்றி, தழைச்சத்து அதிகம் உள்ள மண்ணில் மரவள்ளி கிழங்கு நன்றாக செழித்து வளரும்.

மரவள்ளிக் கிழங்கில் ரோஸ் மரவள்ளிக் கிழங்கு, முள்ளுவாடி மரவள்ளிக் கிழங்கு வகைகள் அதிகம் விற்பனையாகும். ரோஸ் மரவள்ளிக் கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையே மக்கள் அதிகம் வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள். முள்ளுவாடி மரவள்ளிக் கிழங்கு ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் ஆலைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிழங்கில் ஒரு கிலோ வரை பவுடர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மரவள்ளிக் கிழங்கு சாகுபடி பெரும்பாலும் ஆலைகளை நம்பியே இருக்கிறது. ஆலைகள் வருடம் முழுவதும் இயங்கி வருவதால் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு ஏற்ற வர்த்தக நடவடிக்கை” என்று அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com