

இயற்கை நமக்கு பல அதிசயங்களை கொடுக்கிறது. அதில் நாம் பல விஷயங்களை பார்க்கிறோம். அதில் ஒன்று தான் நடக்கும் மரம்.
மரம் என்பது இயற்கை கொடுத்த வரம். மரங்கள் நடவேண்டும் என்று தான் பல நலம் விரும்பிகள் நினைக்கின்றனர். வீட்டிற்கு வீடு மரம் வேண்டும் என்று தான் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பூமியில் பல உயிரினங்கள் இருப்பது போலவே பல மரங்கள், பல வகை தாவரங்களும் இருக்கின்றன.
அப்படி ஒன்று தான் நடக்கும் மரம். இது உலகம் முழுவதும் பரவலாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு பின்னால் அறிவியல் காரணங்களும் உள்ளன. பொதுவாக காட்டில் திசை மாறி போகக்கூடாது என்பதற்காக, சென்ற பாதையில் இருக்கும் மரங்களில் குறியீடு போடுவோம். அந்தளவுக்கு மரம் நகராது என்பதில் நம்பிக்கை. ஆனால் இங்கு ஒரு மரம் நகர்கிறது என்றால் அது மிகப்பெரிய ஆச்சரியம் தான்.
இந்த நடக்கும் மரத்தின் அறிவியல் பெயர் Socratea exorrhiza ஆகும். இதனால் இது பொதுவாக 'வாக்கிங் ட்ரீ' (Walking Tree) என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும் ஒரு வகை பனை மரம் (Palm Tree) ஆகும்.
இந்த மரம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மெதுவாக நகர்கிறது என்ற கருத்து வரக்காரணம் அதன் வேர்ப்பகுதி ஆகும். இந்த மரத்தின் சிறப்பாக மண் அரிப்படைந்தாலோ அல்லது நிலம் நிலையற்றதாக இருந்தாலோ, இந்த மரம் சாய்ந்து போகாமல் இருக்க, சாய்ந்திருக்கும் திசையின் எதிர் திசையில் புதிய வேர்களை வளர்க்கிறது. அதே நேரத்தில், பழைய வேர்கள் மெதுவாக மட்கி விடுகின்றன.
இதனால் மரம் ஒரு திசையில் சாய்ந்து, மறுபுறம் புதிய வலுவான வேர்களை உருவாக்கி, பின்னர் மீண்டும் நேராக நிமிர்ந்து நிற்கும் போது, அது அந்த இடத்திலிருந்து நகர்ந்தது போல ஒரு தோற்றத்தை கொடுக்கும்.
நடக்கும் மரம் என்பதற்காக இந்த மரம் மனிதர்கள் அல்லது விலங்குகள் போல உண்மையில் நடப்பதில்லை. ஆனால் நீண்ட காலப்பகுதியில் நிகழும் இந்த வேர் மாற்றங்களால், மரம் மெதுவாக இடப்பெயர்ச்சி அடைந்தது போல தோன்றும்.