டெங்கு காய்ச்சலின் வரலாறும் தற்போதைய நிலையும்!

History of dengue fever.
History of dengue fever.
Updated on

ழைமையான கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் இயற்கை எழில் கொண்ட நாடு இந்தியா. இங்கு தொற்று நோய்கள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால், இந்நாட்டை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் மிகப்பெரிய எதிரிதான் டெங்கு காய்ச்சல். தற்போது பருவ மழை பெய்து வருவதால், ஏடிஸ் கொசுக்களால் பரவும் வைரஸ் நோயான டெங்குவின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் டெங்கு காய்ச்சல் தொடங்கியதன் வரலாற்றை சற்று அறிந்துகொள்வோம்.

இந்தியாவில் டெங்கு காய்ச்சல்: டெங்கு காய்ச்சலின்போது ஏற்படும் மூட்டு மற்றும் தசை வலி காரணமாக இதை எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் கூறுகின்றனர். இது முதன் முதலில் 1950களின் முற்பகுதியில் இந்தியாவில் தோன்றியது. குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னையில்தான் முதலில் பரவத் தொடங்கியது. இந்த நோயானது, 1960களில் அதிக நபர்களுக்குப் பரவி, பலரது கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் பரவி, நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என அனைத்தையும் பாதித்தது.

1990களில் ஏற்பட்ட திருப்புமுனை: இதன் தொடக்கக் காலங்களில் டெங்கு அங்குமிங்குமாகப் பரவினாலும், 1990களில் இந்தியாவில் டெங்குக் காய்ச்சல் ஒரு குறிப்பிட்ட திருப்புமுனையை ஏற்படுத்தியது. DEN-2 எனப்படும் இதன் இரண்டாம் வகை வைரஸ் அறிமுகமானது. அச்சமயத்தில் நகரமயமாக்கல், அதிகப் பயணம் மற்றும் மாறி வரும் சூழ்நிலை காரணங்களால் ஏடிஸ் கொசுக்கள் அதிகரித்து டெங்கு வைரஸ் வேகமாகப் பரவுவதற்கான சூழலையை உருவாக்கியது. இதனால் டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டன. இச்சமயத்தில் டெங்கு இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடியது.

21ம் நூற்றாண்டிலும் அச்சுறுத்தல்: 21ம் நூற்றாண்டிலும் இந்தியாவில் டெங்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் இதன் பாதிப்பு அதிகரித்தது. கடந்த 2006ல் இந்தியா டெங்குக் காய்ச்சலின் மிக மோசமான பாதிப்பைக் கண்டது. ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இதை எதிர்கொள்ள முடியாமல் அனைவரும் திக்கு முக்காடினர்.

இதைத்தொடர்ந்து, இந்திய அரசாங்கமும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. டெங்கு தடுப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள், அதைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி முயற்சிகளில் அரசாங்கம் தீவிரம் காட்டியது. ஆனால், இன்றுவரை டெங்குவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

பருவ மழை காலங்களில் அதிகமாகப் பரவும் இந்த டெங்கு காய்ச்சலுக்கான உரிய மருந்தை, அரசாங்கம் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என நாம் நம்புவோம். அதுவரையில், டெங்கு காய்ச்சலிலிருந்து நாம் தப்பிப்பதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுவோம்.

logo
Kalki Online
kalkionline.com