

உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றை வெட்டிவிட நேரும்போது மற்ற பகுதிகளைப் போல் அதன் அடிப்பகுதித் தண்டு மற்றும் வேர்ப்பகுதியை நீக்குவது அவ்வளவு எளிதல்ல. அதை முழுவதுமாக நீக்குவதற்கான வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.
அப்பகுதியை தானாக மக்கிப்போக விட்டு விடுவது சிறந்த வழியாகத் தோன்றினாலும், அது நீண்ட நாட்களை எடுத்துக்கொள்ளும் என்பது உண்மை. அதுவரை நாம் அங்கும் இங்கும் நடக்கும்போது கால் இடறுவது ஆபத்தை விளைவிக்கும்.
வேலையாட்களின் உதவி இன்றி நாமே அதை நீக்க முயற்சிக்கலாம். அதற்கு, சுற்றியுள்ள மண்ணை உடைக்க குந்தாலி (Pickaxe), மண்ணை அள்ளிப்போட மண்வெட்டி (Shovel), வேர்களை நறுக்க கோடாலி மற்றும் ஸ்டம்ப்பை பிடுங்க நெம்புகோல் (Lever) போன்ற கருவிகள் தேவைப்படும். மேலும் அதைத் தள்ளவும் இழுக்கவுமென உடலிலுள்ள சக்தியும் தேவைப்படும்.
சிறிய மரமானல் ஒன்றிரண்டு மணி நேரமும், பெரியதாயின் முழு நாள் உழைப்பையும் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
இரண்டாவது வழி, தொழில்முறை வல்லுநர்களை நாடுவது. அவர்கள் சக்தி வாய்ந்த கிரைண்டிங் மெஷினைக் கொண்டு வந்து அதன் மூலம் மர ஸ்டம்ப்பை அழுத்தி, நசுக்கிக் கடைந்து தூள் தூளாக்கி வேலையை முடித்துக் கொடுத்துவிடுவார்கள். செலவு,
உடைத்தெடுக்க வேண்டிய மர ஸ்டம்ப்பின் விட்டத்தின் (Diameter) அளவு, மண்ணுக்குக் கீழ் அது அமைந்திருக்கும் ஆழம் மற்றும் தரைக்கு மேல் அதன் உயரம் போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும். மரத்தின் அளவு சிறியதாயின், இந்த கிரைண்டிங் மெஷினை வாடகைக்கு எடுத்து நீங்களே கூட செய்து கொள்ளலாம். அதில் செலவு குறைய வாய்ப்பு இருந்தாலும் ஆபத்தும் உண்டு. கிரைண்டிங் செயலில் தெறித்து விழும் மரத்தூள் உங்கள் கண்களை பதம் பார்த்துவிடாமல் பாதுகாப்பதும், மொத்த தூளையும் மீண்டும் குழிக்குள் தள்ளி சமநிலைப்படுத்தி உரமாக்குதல் அல்லது, நிலத்து நீர் உஷ்ணத்தால் ஆவியாவதை தடுக்க மரத்தூளை தோட்டம் முழுக்க பரத்தி மல்ச் (mulch) அமைப்பதும் உங்கள் பொறுப்பாகும்.
மூன்றாவதாக, மர ஸ்டம்ப் மீது துளைகள் போட்டு அதில் திக்கான உப்பு, பொட்டாசியம் நைட்ரேட் ஆல்கலிஸ் போன்ற இரசாயனக் கரைசல்களை ஊற்றி ஸ்டம்ப் அழுகி, சிதைவடையச் செய்யும் முறையாகும். இதற்கும் கால அவகாசம் அதிகம் தேவைப்படும். பின் இந்த இரசாயனங்கள் மூலம் மண்ணின் தன்மை கெட்டு விட வாய்ப்புண்டு. மண்ணின் தரத்தை சோதித்து, pH அளவை சமநிலைப்படுத்தி அதன் பிறகே பிற பயிர்கள் அல்லது மரக்கன்றை வைத்து வளர்க்க முடியும்.
நான்காவதாக, மர ஸ்டம்ப்பை தீயிட்டுக் கொளுத்தியும் அழித்துவிடலாம். ஆனால், பக்கத்தில் உள்ள வீடு, மரம் செடி போன்றவற்றை கருத்தில் கொள்வதும், அதற்காக சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி பெறுவதும் அவசியம்.
உங்களுக்கு இது போன்றதொரு சூழ்நிலை உருவாகும்போது பாதுகாப்பு, பட்ஜெட், பலாபலன் போன்ற அனைத்து நன்மை தீமைகளையும் நன்கு ஆராய்ந்து அறிந்து முடிவெடுப்பது நன்மை தரும்.