‘வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று தமிழ்நாடு வேளாண் துறை தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக வேளாண் துறை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், ‘தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் மற்றும் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ட்ரோன் போன்ற நவீன வேளாண் கருவிகளும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
2023-24ம் நிதி ஆண்டில் அரசின் மானியத்தில் கிராமப்புற இளைஞர்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளால் அமைக்கப்பட்ட வேளாண் இயந்திர வாடகை மையங்களில் கூடுதலாக ட்ரோன் வாங்க 40 சதவீதம் அல்லது நான்கு இலட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
ட்ரோன்களைக் கொண்டு வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க அல்லது ஏற்கெனவே அமைக்கப்பட்ட வேளாண் இயந்திர வாடகை மையங்கள் உயர் தொழில் நுட்ப வாடகை மையங்களில் ட்ரோன்களை வாங்கிட விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு ட்ரோன்களின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது 5 இலட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.
ட்ரோனை மானியத்தில் பெறும் விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சியினைப் பெற்று அதற்கான உரிமத்தினையும் பெற்று ட்ரோனை இயக்கலாம் அல்லது ஏற்கெனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர்கள் மூலம் இயக்கலாம். ட்ரோனை வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து மூன்று சதவீகித வட்டி மானியம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இரண்டு ட்ரோன் நிறுவனங்களின் இரண்டு மாடல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் விருப்பமுள்ளவற்றை விவசாயிகள் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
ட்ரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://aed.tn.gov.in/en/services/evaadagai/land-developement/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.