இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, விவசாயிகள் குழுவாக இணைந்து தங்களுக்குத் தேவையான இடுபொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும்விதமாக இயற்கை இடுபொருட்களை உழவர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்திட 2023 - 24ம் ஆண்டுக்கான மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில் பங்கு பெறுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள அறிவிப்பில், ‘இயற்கை விவசாயம் செய்திடும் அல்லது இயற்கை விவசாயம் செய்திட ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை இடுபொருட்களைத் தயாரிக்கும் மையம் நிறுவ 1 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதன் மூலம் இயற்கை இடுபொருட்கள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு, உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூலப்பொருட்கள் வாங்கிக்கொள்ள இந்தத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்யத் தேவையான அனுமதியும் வழங்கப்படும்.
இதன் மூலம், சிறு குறு விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருட்களைத் தாங்களே தயாரித்துக்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை விவசாயம் செய்பவர்களின் நிதிச் சுமை குறையும் என்றும், மண் வளம் மற்றும் விளைச்சல் அதிகரிக்கும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.