

மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் கரப்பான் பூச்சி (Madagascar Hissing Cockroach) என்பது மடகாஸ்கர் தீவுகளில் மட்டுமே காணப்படும் உலகின் மிகப்பெரிய மற்றும் தனித்துவமான பூச்சியினமாகும். ஆபத்துக் காலங்களில் காற்றை வெளியேற்றி விசில் அடிப்பது போன்ற 'ஹிஸ்' (Hissing) ஒலியை எழுப்புவதால் இப்பெயரைப் பெற்றது.
அளவும் தோற்றமும்:
இவை 2 முதல் 4 அங்குலங்கள் வரை நீளமாக வளரக்கூடியவை. 1/4 முதல் 7/8 அவுன்ஸ் எடையும் கொண்ட இவற்றிற்கு இறக்கைகள் கிடையாது. ஆனால் மிகவும் வேகமாக ஓடக்கூடியவை. இவற்றின் கால்களில் உள்ள சிறிய உறிஞ்சிகள் மற்றும் கொக்கிகள் மூலம் மென்மையான பரப்புகள், மரங்கள் மற்றும் கண்ணாடி சுவர்களில் கூட மிக எளிதாக ஏறக் கூடியவை. இவை சராசரியாக 2 முதல் 3 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. சில சூழ்நிலைகளில் 5 ஆண்டுகள் வரை கூட இவை உயிர் வாழ்கின்றன.
கரப்பான் பூச்சி எப்படி பாம்பைப் போல சீறுகிறது?
இவற்றின் மிக முக்கியமான மற்றும் பிரத்தியேகமான சிறப்பு, இவை ஆபத்துக் காலங்களில், இனச்சேர்க்கையின் பொழுது அல்லது பிற பூச்சிகளுடன் சண்டையிடும் பொழுது பாம்பைப் போல சீறும் ஒலியை எழுப்பும். மற்ற பூச்சிகள் தங்கள் கால்களைத் தேய்த்து சத்தம் எழுப்பும். ஆனால் இந்த இனம் மட்டுமே தனது உடலின் பக்கவாட்டில் உள்ள சுவாசத் துளைகள் வழியாக காற்றை வேகமாக வெளியேற்றி இந்த சத்தத்தை உருவாக்குகின்றது. மனிதர்களைப் போல வாய் வழியே அல்லாமல், தங்கள் வயிற்றுப் பகுதியில் உள்ள துளைகள் (Spiracles) வழியே காற்றை வேகமாக வெளியேற்றி இந்த ஒலியை உருவாக்குகின்றன.
ஆண் பெண் வேறுபாடு:
ஆண் மற்றும் பெண் பூச்சிகளை அவற்றின் தலைப்பகுதி, கொம்புகள், உணர்கொம்புகள் மற்றும் வயிற்றுப் பகுதி ஆகியவற்றை வைத்து எளிதாக வேறுபடுத்தி அறியலாம். ஆண் கரப்பான் பூச்சிகளை அவற்றின் தடிமனான, மயிரடர்ந்த உணர்கொம்புகள் மற்றும் மார்புப் பகுதியில் உள்ள மிகவும் தெளிவான புடைப்புகளைக் கொண்டு பெண் கரப்பான் பூச்சிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காணலாம். ஆணின் உணர் கொம்புகள் பெண் பூச்சிகளை விட மிகவும் தடிமனாக இருக்கும். ஆண் பூச்சியின் வயிற்றின் கீழ் பகுதியில் (Tail end) 3 சிறிய கண்டங்கள் (Plates) காணப்படும். ஆனால் பெண் பூச்சியின் வயிற்றின் அடிப்பகுதியில் ஒரே ஒரு பெரிய கண்டம் மட்டுமே காணப்படும்.
விசித்திரமான இனப்பெருக்கம்:
பெண் பூச்சிகளைக் கவர ஆண் பூச்சிகள் தங்கள் உடலில் உள்ள துளைகள் வழியாகக் கடுமையான சீறும் ஒலியை எழுப்புகின்றன. மற்ற ஆண்களை எதிர்த்துப் போராட தங்கள் தலையில் உள்ள சிறிய கொம்புகளையும் பயன்படுத்துகின்றன. இனச்சேர்க்கைக்குப் பிறகு, பெண் பூச்சி முட்டைகளை கொக்கூன் போன்ற முட்டைப் பையில் சேகரித்து தனது வயிற்றுக்குள் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. சுமார் 60 நாட்களுக்குப் பிறகு முட்டைகள் தாயின் உடலுக்குல் குஞ்சு பொரிக்கின்றன. பின்னர் தாய் பூச்சி சுமார் 60 வரையிலான இளம் குட்டிகளை உயிருடன் வெளியே தள்ளுகிறது. புதிதாக பிறந்த குட்டிகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். அவை முழு வளர்ச்சி அடைந்த பூச்சிகளாக மாறுவதற்கு 6 முறை தங்கள் தோலை உரிக்கின்றன. இதற்கு 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும். இப்படி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் மற்ற பூச்சிகளைப் போல முட்டையிடாமல், தாயின் உடலினுள்ளேயே முட்டைகளை அடைகாத்து குஞ்சுகளாக (Nymphs) ஈன்றெடுக்கின்றன.
கரப்பான் பூச்சி சுற்றுச்சூழலை எப்படி பாதுகாக்கிறது?
இயற்கையில் அழுகிய மரங்கள் இலைகள் மற்றும் பழங்களை மட்டுமே உண்டு வாழ்கின்றன. சுற்றுச்சூழலில் காடுகளில் அழுகிய மரங்கள் மற்றும் இலைகளை உண்டு, அவற்றை மக்கச் செய்து சத்துமிக்க உரமாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
செல்லப்பிராணியாக வளர்க்க ஏற்ற கரப்பான் பூச்சி எது?
இவை மனிதர்களின் வீடுகளை அசுத்தப்படுத்தும் பூச்சிகள் அல்ல. இயற்கையிலேயே மிகவும் சாதுவானவை, கடிப்பதில்லை. நோய்களை பரப்புவதில்லை. துர்நாற்றம் வீசுவதில்லை. இவற்றின் தனித்துவமான குணங்களால் பல நாடுகளில் மக்கள் இவற்றை கண்ணாடித் தொட்டிகளில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கின்றனர்.