குன்னூர் வளங்கள் மீட்பு மையத்தின் மூலம், மாமிச கழிவுகள் இயற்கை உரங்களாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.
உலக நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது குப்பை மேலாண்மை. குப்பைகளை எப்படி மறுசுழற்சி செய்வது, குப்பைகளை குறைக்க எடுக்கும் நடவடிக்கை போன்றவையே இன்றைய வல்லரசு நாடுகள் முதல் அனைத்து நாடுகளும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக குன்னூர் ஓட்டு பட்டறையில் மாமிசக் கழிவுகளை தரமான இயற்கை உரமாக மறுசுழற்சி செய்யும் ஆலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் குப்பை கிடங்காக இருந்த குன்னூர் ஓட்டு பட்டறை பகுதி தற்போது மிகப்பெரிய மாமிச உர தயாரிப்பு ஆலையாக மாறி இருக்கிறது.
இங்கு நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு விதமான குப்பைகள் வருகின்றது. அவற்றை வளங்கள் மீட்பு மையத்தில் ஒன்று சேர்த்து, அவற்றை தனித்தனியாக பிரித்து எடுத்து வெயிலில் காயவைத்து உலர்ந்த பிறகு, அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனி பெல்ட்டில் கொட்டி மாமிசக் கழிவுகள், காய்கறி கழிவுகள் என்று தனித்தனியாக பிரித்து எடுக்கப்படுகிறது. அதன் பிறகு அவை 40 நாட்கள் உலர வைக்கப்பட்டு அரைத்துக் கூலாக மாற்றப்படுகிறது. அதன் பிறகு அவை உரங்களாக பயன்படுத்த தயாராக விடுகிறது. இந்த உரங்களை பயன்படுத்தி நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த உரத்தின் மூலம் நல்ல விளைச்சல் கிடைப்பதாக கூறி மீண்டும் மீண்டும் விவசாயிகள் மாமிச கழிவு உரங்களை வாங்க வருகின்றனர். இதனால் குன்னூர் பகுதியில் குப்பைகள் தேங்குவது பெருமளவில் குறைந்து இருக்கிறது.