

குப்பையிலிருந்து குன்றாத வளம்…
நம் வீடுகளில் தினமும் குப்பைத்தொட்டிக்குள் போடப்படும் காய்கறித் தோல்கள், பழத்துண்டுகள், தேயிலைத்தூள் ஆகியவை உண்மையில் குப்பையா? இல்லை, அவை சரியான கைகளில் பட்டால் மண்ணை உயிர்ப்பிக்கும் அரிய செல்வமா? இந்தக் கேள்விக்கான விடைதான் மண்புழு உரம்.
ஒரு காலத்தில் கிராமத்து வீடுகளில் இயல்பாக நடந்த செயல் இது. இன்று நகர வாழ்க்கையின் வேகத்தில் நாம் மறந்துபோன பழக்கம். ஆனால் இன்றைய சுற்றுச்சூழல் சவால்கள், மீண்டும் அந்த எளிய நடைமுறையை நோக்கி திரும்பச் சொல்கின்றன.
வீட்டு கிச்சன் வேஸ்டை கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது கடினமான விஷயமல்ல. வீட்டின் பின்புறம் அல்லது மாடியில் நிழலான ஓரிடத்தில் ஒரு தொட்டி இருந்தாலே போதும்.
அதில் ஓரங்களில் இரண்டு அல்லது மூன்று துளைகளைப் போட்டு அதன் அடியில் உலர்ந்த இலைகள், காகிதத் துண்டுகள் அல்லது வைக்கோல் போட்டு அதன் மேல் தினசரி நாம் குப்பையாக வீசும் காய்கறி, பழக்கழிவுகள் சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.
இதன் மீது சிறிதளவு மாட்டு சாணம் அல்லது மண்ணைச் சேர்த்தால், மண்புழுக்கள் உருவாக முதல் படி தயாராகிறது. அந்த கலவையில் சிறிது கடைகளில் வாங்கிய மண்புழு உரத்தை போட்டு நன்கு கிளறி விடவும். அவற்றில் சில நாட்களில் , மண்ணுக்கு உயிர் தரும் உரமாக உருப்பெற்று விடும். அதில் நீர் ஊற்றாமல், ஈரப்பதம் மட்டும் இருக்கும் வகையில் பராமரித்தால் போதும். சுமார் 30 முதல் 45 நாட்களில், அந்தக் கழிவுகள் கருமை நிறம் கொண்ட, மணமற்ற, வளமான உரமாக மாறும்.
இந்த உரம் செடிகளுக்கு ஊட்டச்சத்துகளை அளிப்பதோடு, மண்ணின் இயற்கை தன்மையையும் பாதுகாக்கிறது. ரசாயன உரங்களால் சோர்ந்த மண்ணுக்கு இது ஒரு புத்துயிர். மண்புழு உரத்தின் சிறப்பு என்னவென்றால், இது வெறும் உரம் மட்டுமல்ல; இயற்கையுடன் இணைந்து வாழும் பண்பு. குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் கல்வியை நடைமுறையில் கற்றுத்தரும் பாடம்.
“நாம் தனியாக என்ன செய்யமுடியும்?” என்ற கேள்விக்கு, ஒரு சிறிய பதில்தான் இந்த மண்புழு உரம். ஒரு வீட்டில் தொடங்கும் இந்த முயற்சி, ஒரு தெருவாக, ஒரு நகரமாக விரிந்தால், குப்பை பிரச்னைக்கும் மண் வளச்சோர்வுக்கும் தீர்வு கிடைக்கும்.
குப்பை என்று ஒதுக்கிவிடும் பொருளில் கூட, வாழ்க்கை மறைந்திருக்கிறது என்பதை நினைவூட்டும் இந்த மண்புழுக்கள், நமக்கு சொல்லும் செய்தி ஒன்றே… இயற்கையை மதித்தால், இயற்கை நம்மை கைவிடாது.