

விவசாயத்தில் பயிர் ஆரோக்கியத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், மண் ஈரப்பதம், பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சியை முன்கூட்டியே கண்டறியவும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுகிறது. செயற்கைக்கோள் தரவு மூலம் (Satellite technology in agriculture) துல்லியமான உர மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் பயிர் விளைச்சல் முன்னறிவிப்பு செய்து, விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தி, செலவுகளை குறைக்க உதவுகிறது.
செயற்கைக்கோள், தொலைநிலை சென்சார்கள் மற்றும் யுஏவி அல்லது ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் நம்மால் 24 மணி நேரமும் தகவல்களை சேகரிக்க முடியும். ஆரம்பத்தில் செயற்கைக்கோள்கள் பயிர் விளைச்சலை மதிப்பிடுவதற்கான வழிமுறையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்பொழுது ஆப்டிகல் மற்றும் ரேடார் சென்சார்களின் மூலம் பயிரிடப்பட்ட நிலப்பரப்பின் துல்லியமான வரைபடத்தை வழங்க முடிகிறது. அத்துடன் பயிர் வகைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள் மற்றும் அவற்றின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்க முடிகிறது.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன் படுத்துவதன் மூலம் பூச்சிகளின் அச்சுறுத்தலை முன்கூட்டியே அடையாளம் காணமுடியும். உரம் போன்ற உள்ளீடுகளின் தேவையை குறைக்கவும், ஒட்டுமொத்த பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் முடியும்.
பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்கள் போன்ற உள்ளீடுகளைக் குறைக்க உதவுவதால் ஆண்டுக்கு 50 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை மிச்சப்படுத்த முடியும். அதே நேரத்தில் நீர் பயன்பாட்டை 5 முதல் 10% வரை குறைக்கலாம்.
விண்வெளி அடிப்படையிலான தொலைதூர உணரிகள், வானிலை தகவல் மற்றும் ஆப்டிகல், ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் டொமைன்களில் இருந்து படங்கள் உட்பட பல தரவுகளை சேகரித்து பரிமாற்றத்தை எளிதாக்குகின்றது.
பருவ மழை அல்லது வறட்சியின் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் செயற்கைக்கோளின் படங்கள் மூலம் பாதிப்பு அடைந்த பகுதிகள் மற்றும் சேதத்தின் அளவு ஆகியவற்றை அறிய உதவுகிறது. இதனால் அரசாங்கம் தாமதம் இன்றி உடனடியாக முடிவெடுப்பதற்கு இவை உதவுகிறது. அத்துடன் பஞ்சம் குறித்த ஆரம்ப எச்சரிக்கையையும் இவை வழங்குவதால் முன்னேற்பாடுகள் செய்ய உதவியாக உள்ளது. மேலும் திறமையாகவும் சாகுபடி செய்ய வழிவகை செய்கின்றது. உதாரணத்திற்கு வெவ்வேறு நிலங்களுக்குரிய பயிர்கள், உரங்கள், அதன் அளவுகள் போன்ற பலவற்றை பரிந்துரைக்க பயன்படுத்தப்படுகின்றது.
உலகம் அதன் கார்பன் தடத்தைக் குறைக்க நிலையான விவசாயத்தை நோக்கி நகர்கிறது. இந்த சூழலில் ஏராளமான புதுமையான நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் விவசாய தொழில்நுட்பங்கள் ஒரு முக்கியமான அங்கமாக அமைகின்றது. இவை உற்பத்தித்திறனையும் நிதி நன்மைகளையும் அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் உருவாகும் கழிவுகளின் அளவையும் குறைக்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க முடிகிறது. நவீன தொழில்நுட்பம் வானிலை மற்றும் நீர் அழுத்தம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இது விரிவான பயிர் இழப்புகளை முன்கூட்டியே தடுக்க உதவுகிறது.
விவசாயத்தில் ட்ரோன்கள் பயிர் ஆரோக்கியத்தை மதிப்பிடுதல், மண் மற்றும் வயலின் வகையை பகுப்பாய்வு செய்தல், பயிர்களில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இலக்காகக் கொண்டு தெளித்தல், பயிர் நடவு மற்றும் நீர்ப்பாசனம் செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன.
செயற்கைக்கோள் விவசாயம் மூலம் விளைச்சல் அதிகரிப்பதால், உள்ளீட்டு விரயம் இருக்காது. முழு தாவர பருவத்திலும் பயிர் உற்பத்தி திறனை கண்காணித்து மேம்படுத்த உதவுகிறது. பயிர் அபாயங்களைக் கண்டறிவதை மேம்படுத்த உதவுகிறது. களைகள், பூச்சிகள் அல்லது நோய்களை சரியான நேரத்தில் அடையாளம் கண்டு தீர்வு காண்பதன் மூலம் மண்ணின் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடிகிறது.