தமிழ்நாட்டில் நீர்நிலைகளின் பரப்பளவு குறைவு மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பேரிடர் காலங்களில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனை தமிழ்நாட்டில் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மிக அதிக கனமழையை சந்தித்தன, பெருமளவில் பாதித்தன. இந்த பாதிப்பே இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் தற்போது கொட்டி தீர்த்த அதி தீவிர கனமழை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை முற்றிலும் புரட்டி போட்டு இருக்கிறது. வானிலை ஆராய்ச்சி மையம் கூட இத்தனை பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வரக்கூடிய காலங்களில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழ்நாடு மிக தீவிர கன மழைகளை அதிகம் சந்திக்க கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் தமிழ்நாடு இது போன்ற பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க உள்ளது.
பேரிடர்களால் ஏற்படும் பிரச்சனைகள் கட்டுப்படுத்த முடியாதது என்றாலும் மிக அதிகமான பாதிப்பிற்கு காரணம் ரியல் எஸ்டேட் துறையினுடைய அதி தீவிர வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை 100 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை கண்டு வருகிறது. காலி நிலங்கள், விளைநிலங்கள், புறம்போக்கு நிலங்கள் என்று தமிழ்நாட்டில் அதிக நிலப்பரப்புகள் தற்போது கான்கிரீட் கட்டிடங்களாக மாறி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நீர்நிலைகள் பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நீர் வழித்தடங்கள் குறைந்து இருக்கிறது.
இதனால் அதிக அளவிலான நீரை கையாளக்கூடிய திறனை நீர்நிலைகள் இழந்து இருக்கின்றன. மேலும் பெருவாரியான நிலப் பகுதிகள் காங்கிரிட் கட்டடங்களாக மாறி இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருக்கிறது. மேலும் மழை நீர்கள் நிலத்துக்கடியில் இறங்கும் தன்மையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அதிக அளவில் மழை பெய்யும் காலங்களில் நீர்கள் செல்ல வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றன. இதன் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது.
மேலும் குறிப்பாக நீர் வழித்தடங்கள் அதிக அளவிலான ஆக்கிரமிப்புகளை தொடர்ச்சியாக சந்தித்து வருவது சிறிய அளவிலான மழையை கூட தமிழ்நாடு எதிர்கொள்ள முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறது. இதனால் வரக்கூடிய காலங்களில் இன்னும் மோசமான நிலைகள் ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது. எனவே அரசு நீர் மேலாண்மை திட்டங்களை வரக்கூடிய காலங்கள் கவனமாக கையாண்டு சரியாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.