
“டெல்லி நகர் மிகுந்த காற்று மாசு கொண்டது” என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு அண்ணன்கள் “பீகார் மாநிலத்தில் இருக்கிறார்கள்” என்ற செய்தி வெளியாகியிருக்கிறது.
நாட்டிலேயே அதிக காற்று மாசு பீகார் மாநிலத்தில் உள்ளதாக ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், நேற்று முன்தினம் நாட்டின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் பீகாரின் கதிஹார் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. மாநிலத்தின் மொத்தம் 163 நகரங்களில் அதிகபட்சமாக இங்கு காற்றின் தரக்குறியீடு 360 ஆக இருந்தது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 354 ஆக பதிவாகி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டா 324, காசியாபாத்தில் 304 ஆக உள்ளது.
இதேபோல் பீகாரின் பெகுசாராய், பல்லாப்கர், பரிதாபாத், கைதால் மற்றும் அரியானாவின் குருகிராம், மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ஆகியவையும் கடந்த வாரம் மிகவும் மாசுபட்ட நகரங்களாக இருந்தது.
இந்த தரவுகள் நாட்டிற்கு ஒரு எச்சரிக்கை அழைப்பாக கருதப்படுகிறது. அதுவும் புவி வெப்பமயமாவதை குறைக்கப் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற செய்திகள் வந்துகொண்டிருப்பது கவலையளிக்கிறது. காற்று மாசை அதிகரிக்கும் வகையில் பஞ்சாபில் 3,634 இடங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டு உள்ளது. இது, இந்த ஆண்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.
“ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்தச் செயலை நிறுத்த/தடுக்க கொடுக்கும் ஆலோசனைகளை விவசாயிகள் ஏற்பதில்லை” என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் கவலை தெரிவித்துள்ளது.