

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக மரங்களின் கிளைகளை அகற்றி கவாத்து செய்வது வழக்கம். இப்படிச் செய்வதால் குறைந்த எடை காரணமாக புயல் காற்றில் மரங்கள் சாய்வதைத் தடுக்க முடியும். அதோடு மரங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். விவசாயத்திலும் ஒருசில பயிர்களுக்கு வளர்ச்சியை அதிகரிக்க விவசாயிகள் கவாத்து செய்து வருகின்றனர். இதன் வரிசையில் செடிகளில் கச்சிதமாக கவாத்து செய்வது எப்படி மற்றும் இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை விவரிக்கிறது இந்தப் பதிவு.
செடிகளின் வளர்ச்சியை சீரான முறையில் பராமரிக்க, அதன் பக்கவாட்டு கிளைகளை அகற்றி ஒழுங்குபடுத்துவதை கவாத்து என்போம். மனிதர்களாகிய நாம் அடிக்கடி தலைமுடியை வெட்டி சீராக வைத்திருப்பது போலவே, செடிகளின் வளர்ச்சிக்கு கவாத்து செய்வது அத்தியாவசியமாகும். கவாத்து செய்வதால் புதிய கிளைகள், மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியவை அதிகளவில் துளிர்த்து வரும். இதன்மூலம் அதிகளவிலான பூக்களும், காய், கனிகளும் உற்பத்தியாகும். மேலும் கூடுதல் மகசூல் கிடைத்து, வருமானம் உயர அதிக வாய்ப்புள்ளது.