விளைச்சலை குறைக்கும் படைப்புழுத் தாக்குதலிலிருந்து மக்காச்சோளத்தை பாதுகாத்துக் கொள்ளும் வழி.
தமிழ்நாட்டு விவசாய முறையில் முப்போக காலத்திலும் முக்கியமான விளைச்சல் பொருளாக இருப்பது மக்காச்சோளம். இந்தியாவில் உற்பத்தியாகும் மக்காச்சோளத்தில் 47 சதவீதம் கோழித் தீவனமாகவும், 13 சதவீதம் கால்நடைத் தீவனங்கள், 12 சதவீதம் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கும், 14 சதவீதம் மாச்சத்து தயாரிக்கவும், 7 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுக்காகவும், 6 சதவீதம் ஏற்றுமதிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அதிகளவு கால்நடைத் தீவன தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய அளவில் மக்காச்சோள உற்பத்தியில் கர்நாடகா மாநிலம் முதலிடத்திலும், மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்திலும் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டிலும் அதிக பரப்பளவில் பயிர் செய்யப்பட்டு வருகின்றது.
ஆனால் தற்போதைய நவீன விவசாய முறையால் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பு காரணமாக இந்திய மக்காச்சோளங்களினுடைய தேவை உலக அரங்கில் குறைந்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் மக்காச்சோளத்தினுடைய விளைச்சலும் பெரும் அளவில் குறைந்து இருக்கிறது. மக்காச்சோளத்தின் விளைச்சல் பெருமளவில் குறைய முக்கிய காரணம் படைப்புழு தாக்குதல் உள்ளது. படைப்புழு தாக்குதலால் 40 சதவீதத்திற்கும் அதிகமான விளைச்சல் குறைகிறது.
மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கக்கூடிய படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிகள், உழவு செய்யும்பொழுது ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை மண்ணில் இடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தி அந்துப்பூச்சி வெளிவருவதைத் தடுக்க முடியும். மக்காச்சோளப் பயிரில் கதிர் உருவாகும் பருவத்தில் படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எளிதில் தெளிப்பதற்கு ஒவ்வொரு 10 வரிசை பயிருக்கும் 75 செ.மீ. இடைவெளி விடவேண்டும்.
மக்காச்சோளத்தை ஒரே நிலத்தில் பயிர் செய்வதைட்ப தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த இயலும். படைப்புழு தாக்கத்தில் இருந்து மக்காச்சோளப் பயிரைப் பாதுகாக்க வேளாண் துறை அலுவலரிடம் நேரடியாக அணுகி ஆலோசனைகளைப் பெற்று பூச்சி மருந்துகளைத் தெளித்தும் பயன் பெற முடியும்.
தாய் அந்துப்பூச்சிகளைக் கவனிக்க, கட்டுப்படுத்த விளக்குப் பொறிகள் அல்லது சாதாரண மின் விளக்குகளுக்குக் கீழே ஓர் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து ஹெக்டேருக்கு 1 என்ற வீதத்தில் அடிக்கடி இடம் மாற்றி வைக்க வேண்டும்.