கொசுக்கள் பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் உண்மையிலேயே நமக்கு பெரிய தொல்லையைக் கொடுக்கும் பூச்சியாகும். அதுவும் இரவு நேரங்களில் பலரது தூக்கம் கொசுக்களால் கெடுகிறது. நமது ரத்தத்தை அவை குடிப்பது மட்டுமின்றி, அரிப்பையும் ஏற்படுத்தி பல்வேறு விதமான நோய்களையும் பரப்புகின்றன. ஒருவேளை, பூமியில் உள்ள எல்லா கொசுக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டால் என்ன ஆகும் என எப்போதாவது யோசித்ததுண்டா? அது நம்முடைய பிரச்சினையைத் தீர்க்குமா? அல்லது புதிய பிரச்சினைகளை உருவாக்குமா? என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் சுற்றுச்சூழல் அமைப்புகளில் கொசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அவை பறவைகள், வவ்வால்கள் மற்றும் மீன்கள் போன்ற உயிரினங்களுக்கு உணவாக இருக்கின்றன. உணவுச் சங்கலியில் இருந்து கொசுக்களை அகற்றுவதால் இயற்கை சமநிலை சீர்குலைந்து எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்.
இருப்பினும் கொசுக்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதால் கிடைக்கும் உடனடி பலன் என்னவென்றால், அதன் மூலமாக பரவும் நோய்களைத் தடுப்பதுதான். மலேரியா, டெங்குக் காய்ச்சல், ஜிகா வைரஸ் போன்ற நோய்களைப் பரப்புவதே கொசுக்கள்தான். இந்த நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். கொசுக்கள் இல்லை என்றால் இத்தகைய நோய்களின் பரவல் நின்றுவிடும். இது மூலமாக எண்ணற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.
மேலும் கொசுக்களை ஒழிப்பது விவசாயத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளுக்கு கொசுக்கள் உணவாக இருக்கின்றன. எனவே அவற்றை ஒழிப்பதன் மூலம் விவசாய நிலங்களில் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு பயிர் விளைச்சல் அதிகரிக்கும். அத்துடன் பூச்சிக்கொல்லி பயன்பாடும் குறையும்.
கொசுக்கள் சில தாவர இனங்களுக்கு மகரந்த சேர்க்கையாளர்களாக செயல்படுகின்றன. மேலும் நீரில் வாழும் சிறிய உயிரினங்களுக்கு உணவாகவும் இருப்பதால், அவை இல்லை என்றால் இதுபோன்ற செயல்முறைகள் சீர்குலைந்து சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலை பாதிக்கப்படலாம்.
நீங்கள் நினைப்பது போல அவ்வளவு எளிதாக உலகில் உள்ள மொத்த கொசுக்களையும் அழித்துவிட முடியாது. உலகெங்கிலும் கிட்டத்தட்ட 3500 வகையான கொசுக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான வாழ்விடங்கள் மற்றும் நடத்தைகளைக் கொண்டுள்ளன. மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உலகில் இருந்து நீக்குவது முற்றிலும் கடினமான பணியாகும்.
நமது கிரகத்தில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கை என்பது முற்றிலும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டதாகும். ஒரு இனத்தை முழுமையாக அழித்தால் கூட அதைச் சார்ந்திருக்கும் மற்ற இனங்களும் அழியும் நிலைக்கு தள்ளப்படும். எனவே அவற்றை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு பதிலாக, கொசுக்களிடமிருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதே நல்லது.