விவசாயத்தில் முதன்மையானது ஆடிபட்டம் ஆகும். ஆடிமாத மேகத்துக்கு ஆடிகரு என்று பெயர் உண்டு. ஆடிகரு ஏமாற்றாது என்ற சொல்வழக்கு உண்டு. ஆடிபட்டம் தேடி விதைத்தால் அதிக மகசூல் நிச்சயம். ஜூன் மாதத்தில் துவங்கும் தென்மேற்கு பருவ மழையால் பூமி குளிர்ந்து, மண் ஈரபதத்துடன் பாசன வசதிக்கு ஏற்ப தயாராக இருக்கும். இதன் படி ஆடியில் விதைத்து தையில் அறுவடை செய்வர்.
விளை நிலங்களுக்கு முதல் மழையை கொண்டு வரும் மாதம் ஆடி. புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்து விடும். மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்க அருமையான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும். ஆடி 18 ம் தேதியும் அதற்கு பிறகும் விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும். குறுவை சாகுபடியில் நெல் விதைக்க தொடங்குவார்கள்.
விவசாயத்திற்கு விதையே ஆதாரம். விதையின் சுத்த தன்மை, ஈரப்பதம், முளைப்பு திறன் ஆகியவற்றை நல்ல முறையில் பராமரித்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும்.
ஆடி நடவுக்கு ஏற்ற தானிய பயிர்கள் உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி, சாமை.
வாழை நடவுக்கு ஏற்ற மாதம் ஆடி.
ஆடி மாதத்தில் மாடி தோட்டத்தில் என்னென்ன விதைகளை தேடி விதைக்கலாம்?
வீட்டு தோட்டம், மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி, கீரை வகைகள், பூச்செடிகள் வளர்க்க ஏதுவான திட்டம் ஆடி மாதம்.
செடி காய்கறிகள்:
நெய் கத்தரிக்காய்: இது தாய்லாந்து நாட்டின் மரபு ரக கத்தரி. பூச்சி தாக்குதல் நோய் தாக்குதல் இல்லாமல் வளரும். இதில் நெய் வாசனை வராது. ஆனால் நெய் சுவையும், வளவளப்பு தன்மையும் இருக்கும்.
காசி தக்காளி: கொத்து கொத்தாக காய்க்கும் ரகம். அதிக சதைப்பற்றுள்ளது. பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கிடையாது.
யானைதந்த வெண்டை: பூச்சிகள் தாக்காது, இது பெரிய அளவில் காய்க்கும் ஒரு சுவையான ரகம். அதிகமாக காய்கள் கிடைக்கும்.
செடி தம்பட்டை அவரை: அவரை சத்தை விட அதிக சத்துக்கள் உள்ளது. கொத்து கொத்தாக காய்த்து அதிக பலனைத்தரும்.
கொடி காய்கறிகள்:
நுரை பீர்க்கங்காய்: மிகவும் சுவையான ரகம். ஒரு முறை வைத்தால் வெயில், மழை, பனி எல்லாம் தாங்கி அதிகமான விளைச்சலை தரும்.
நாலடி நீளமுள்ள சுரைக்காய்: பூச்சி தாக்காது. மிகவும் சத்தானது. ஒரு சுரைக்காய் 2 குடும்பமே சாப்பிடலாம்.
மூக்குத்தி அவரை: பாரம்பரியமான அவரை. சத்து மிகுந்தது. பராமரிப்பு இல்லாமலே பெரிய மரங்களின் மீது படர்ந்து வளரக்கூடியது.
மருத்துவ காய்கறிகள்:
கஸ்தூரி வெண்டை: அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. குழந்தைகளுக்கு கொடுத்தால் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பூனைக்காலி: நீரிழிவு நோய்க்கு, மற்றும் ஆண்மை குறைவுக்கு மிக சிறந்தது. கொத்து, கொத்தாக காய்க்கும். இதன் பருப்பை சமையல் பண்ணி சாப்பிடலாம். விதைகளை காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து சாப்பிடலாம்.
பூச்செடி வகைகள்:
சாமந்தி: பூச்சி தாக்குதலை கட்டு படுத்தும். மகரந்தச் சேர்க்கைக்கு உகந்தது. தோட்டம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
சூரிய காந்தி: இதை வளர்ப்பதால் நன்மை செய்யும் பூச்சிகள் தீங்கு தர கூடிய பூச்சிகளை அளித்து விடும். மகரந்தச் சேர்க்கைக்கு உகந்தது.
செம்பருத்தி: அதிக மருத்துவ தன்மை கொண்டது. அழகான மலராகவும், ஆன்மீக மலராகவும் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் நல்ல நல்ல விதைகளை தேர்வு செய்து தோட்டம் அமைத்து நிறைவுடன் வாழ்வோம்.