ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள் மட்டும் விசேசமில்லை.. அப்போது செய்யப்படும் இனிப்புகளும் ஸ்பெஷல்தான். அதில் இரண்டின் செயல்முறைகளைப் பார்ப்போம்.
ஆடிப்பால்
ஆடிப்பால் என்பது செய்வதற்கு எளிமை மற்றும் சுவையான இனிப்பு பானமாகும். வெல்லம் மற்றும் தேங்காய்ப்பால் இதன் அடிப்படை ஆகிறது. தேங்காய் பால் நிறைய நன்மைகளுடன் செரிமான பிரச்சனை களுக்கும் உதவுகிறது ஆடியில் வரும் நோய்களை விரட்டி எதிர்ப்பு சக்தியைத் தரும்.
செய்முறை:
புதிய கெட்டித் தேங்காய் பயன்படுத்தி கெட்டிப்பால் மற்றும் 2 வது பால் தனித்தனியே எடுத்து வைக்கவும். அடுப்பில் தரமான வெல்லத்தை நீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி ஆறவைக்கவும் . ஒரு பாத்திரத்தில் ஆறிய வெல்லக்கரைசலில் 2 ஆவதாக எடுத்த பாலை சேர்த்து அடுப்பில் வைத்து கொதித்ததும், அதிலேயே முதல் கெட்டிப்பால் ஊற்றி கொதிக்க விடாமல் அணைக்கவும். இதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். நறுமணத்துக்காக பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை பொடித்துப் போடலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்றால் அளவுக்கேற்ப சிறிது அரிசிமாவை கரைத்து 2 ம் பாலில் கலந்து சேர்க்கலாம். டேஸ்டியான சத்தான ஆடிப்பால் ரெடி.
கும்மாயம்
கும்மாயம் என்பதற்கு குழையச் சமைத்த பருப்பு என்று பொருள். இது உளுந்து, பாசிப் பருப்பு மாவு, நெய் , பனங்கருப்பட்டி போன்றவற்றை வேக வைத்து செய்யப்படும் பாரம்பரிய செட்டிநாடு இனிப்பு.இதில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
தேவை:
உளுத்தம் பருப்பு - 1 கப்
பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
பனை வெல்லம் - 1/4 கப்
நெய் - தேவைக்கு
செய்முறை:
முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெல்லம் மற்றும் பனை வெல்லத்தை எடுத்துப் பொடித்து அதில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கரைய வைத்து இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, பச்சரிசி, பாசிப்பருப்பு மூன்றையும் தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்சியிலிட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.கும்மாயம் மாவு தயார். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு கப் கும்மாயம் மாவை சேர்த்து மீண்டும் நன்கு வறுத்து எடுத்து ஆறவைத்து ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகுவில் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்கு கிளற வேண்டும்.
ஒருவேளை கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீர் சேர்க்கலாம். பின் மீண்டும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள இந்த மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து கட்டிகளின்றி நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும்போது சிறிது நெய்யை அவ்வப்போது ஊற்றி கிளற வேண்டும். மாவானது நன்கு கெட்டிப்பதம் வரும் போது மீதமுள்ள நெய்யை ஊற்றிக் கிளற வேண்டும். மாவானது கையில் ஒட்டாமல் இருக்கும் இருக்கும் பதமே கும்மாயத்தின் சரியான பதம். தயாரான கும்மாயத்தை இறக்கி மேலே நெய் ஊற்றி சுவைக்கலாம்.