அக்கார வடிசல், ஸ்ரீரங்கம் கோவிலில் அரங்கநாதனுக்கு பாரம்பரியமாக செய்யப்படும் பிரசாதமாகும். அக்கார வடிசலை பற்றி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. ‘அக்காரம்’ என்றால் வெல்லம் அல்லது சக்கரை என்று பொருள். ‘வடிசல்’ என்றால், வேகவைத்த சாதத்தை குறிக்கிறது.
அக்கார வடிசல் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி-1 கப்.
பாசிப்பருப்பு-1/4கப்.
பால்-7கப்.
வெல்லம்-3 கப்.
நெய்-1 கப்.
ஏலக்காய் தூள்- ½ தேக்கரண்டி.
பச்சை கற்பூரம்- சிறிதளவு.
வறுத்த முந்திரி திராட்சை-10
தேங்காய் துருவல்- தேவைப்பட்டால் சேர்க்கவும்.
அக்கார வடிசல் செய்முறை விளக்கம்:
ஒரு கப் பச்சரிசியை ஒரு பவுலில் போட்டு விட்டு 1/4கப் பாசிப்பருப்பை கடாயில் போட்டு லேசாக வறுத்துவிட்டு அரிசியோடு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது அரிசியையும் பருப்பையும் சேர்த்து நன்றாக மூன்று முறை தண்ணீரில் கழுவி எடுத்துக்கொள்ளவும். குக்கரில் போட்டு அத்துடன் 7 கப் பாலை சேர்க்கவும். அத்துடன் ஒரு ஸ்பூனை சேர்த்து போட்டு வேக வைக்கவும். அப்போதுதான் பால் பொங்காமல் இருக்கும். இப்போது குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3கப் வெல்லம் சேர்த்து அத்துடன் ½ கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். இப்போது வெல்லத்தை நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது நன்றாக குழைய வெந்திருக்கும் அரிசி பருப்பில் காய்ச்சி வைத்திருக்கும் வெல்லப்பாகையும் சேர்த்து நன்றாக கிண்டவும். அடுப்பை சிம்மில் வைத்துக்கொண்டு ஒரு கப் நெய்யை சேர்க்கவும். இத்துடன் ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் சேர்த்து கிண்டவும். வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும். தேவைப்பட்டால் தேங்காய் துருவலையும் சேர்த்துக்கொள்ளலாம். இனி அக்கார வடிசலை வீட்டிலேயே செய்து வீட்டில் உள்ள எல்லோரையும் அசத்துங்க.