healthy foods
Appetizing foods

சளி, இருமல், காய்ச்சலா? பசியைத் தூண்டும் இந்த உணவுகளை சாப்பிடுங்க!

Published on

காய்ச்சல் இருக்கும்போது உணவில் பெரிதாக நாட்டம் இருக்காது. பசியும் எடுக்காது. அதற்காக சாப்பிடாமல் இருந்தால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும். காய்ச்சல் வந்தவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதால் மட்டுமே இவற்றை சரி செய்யாமல், ஜீரணத்தை எளிதாக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பசியைத் தூண்டும் வகையில் மிளகு குழம்பு, இஞ்சி துவையல், நார்த்தங்காய் பச்சடி, சீரக ரசம், சுட்ட அப்பளம், கறிவேப்பிலை துவையல் என சாப்பிடுவது சளி, இருமல், தும்மல், ஜலதோஷம், உடல் வலி போன்றவற்றிற்கு நல்லது.

சளி ஜுரம் உடல் வலிக்கு மிளகு ரசம்:

நீர்க்க கரைத்த புளிக்கரைசலில் தேவையான உப்பு, பொடித்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் சிறிது பருப்பு கரைசலைவிட்டு கொதிக்கும் பதத்திற்கு முன்பு மொச்சு வரும் பதத்தில் இறக்கவும். நெய்யில் சிறிது கடுகு, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து கடுகு பொரிந்ததும் ரசத்தில் கொட்டிவிடவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சுட்ட அப்பளத்துடன் சாப்பிட உடம்பு வலி சளி ஜுரம் காணாமல் போய்விடும்.

ஆவியில் வேகவைத்த உணவு:

இரவு எளிதில் ஜீரணமாகக் கூடிய ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை, புழுங்கலரிசிக் கஞ்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் எதுவும் சேர்க்காமல், ஆவியில் வெந்த இந்த உணவுகள் உடலுக்கு பலத்தைத்தரும்.

எளிதான பானங்கள்:

பாலில் சிறிது பூண்டைத் தட்டி போட்டு வேகவைத்து, சிறிது மஞ்சள் தூள், மிளகு தூள், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு காய்ச்சி பருகுவது உடலுக்கு இதம் தரும். வெந்நீரில் சிறிது சீரகம், சுக்குப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பதும் நல்லது.

தொண்டைக்கு இதம் தரும் சூப்புகள், திப்பிலி ரசம், பூண்டு ரசம், இஞ்சி ரசம் குடிப்பதும் உடம்பு வலி, சளி பிரச்னைகளை போக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கோதுமைக் கஞ்சி!
healthy foods

கஞ்சிகள்:

பார்லி கஞ்சி எளிதில் செரிமானம் ஆகும். பார்லியை வெறும் வாணலியில் சூடு வர வறுத்து சிறிது உடைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சவும். அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளையும் சேர்த்து நன்கு குழைவாக வெந்ததும் தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பருகுவது உடலுக்கு தெம்பைத் தரும் புழுங்கல் அரிசியை உடைத்து வெந்தயம் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடிப்பதும் சுகம் தரும்.

கஷாயங்கள்:

துளசி கஷாயம், ஓமவல்லி கஷாயம், தூதுவளை, மிளகு கஷாயம், சித்திரத்தை, திப்பிலி தட்டிப் போட்டு மிளகு சேர்த்து போட்டு கொதிக்கவைத்த கஷாயம், பித்தத்தைப் போக்கும் தனியா, இஞ்சி கஷாயம் என கஷாயங்கள் செய்து வடிகட்டி குடிப்பது காய்ச்சல் நேரங்களில் உடம்பை பாதுகாக்கும்.

logo
Kalki Online
kalkionline.com