முருங்கைக்காயில் உடலுக்கு தேவையான மினரல்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் உள்ளன. முருங்கைக்காய் வளரும் குழந்தைகளின் எலும்பை வலுப்படுத்தும். இது எலும்பை வலுவாக்கி ஆஸ்டியோபொராசிஸ் போன்ற நோய்கள் வயதானவர்களுக்கு வராமல் தடுக்கும். முருங்கைக்காய் குளுமை தன்மை கொண்டது. இந்த வெயில் காலத்தில் இதை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லதாகும். முருங்கைப்பூ தாய்மார்களுக்கு பால் சுரக்க வைக்க உதவுகிறது. ஆண்களுக்கு உயிரணு அதிகரிக்க உதவுகிறது. இத்தகைய பயன்களை கொண்ட முருங்கையை வீட்டிலேயே செய்து பயன்பெறலாம் வாங்க.
முருங்கைப்பூ அல்வா:
தேவையான பொருள்:
முருங்கைப்பூ-1 கைப்பிடி அளவு.
வெல்லம்-1 கப்.
நெய்-1 கப்.
முந்திரி-10
திராட்சை-10
கார்ன்பிளார்-1 கப்.
செய்முறை விளக்கம்:
முதலில் கைப்பிடியளவு முருங்கைப்பூவை எடுத்துக்கொள்ளவும். முருங்கைப்பூவை நன்றாக தண்ணீர் விட்டு அலசி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது அதில் 1 கப் கான்பிளார் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கி விட்டு பின் அடுப்பில் அந்த கலவையை ஊற்றி நன்றாக கின்டவும். சற்றே கெட்டியானதும் வெல்லம் 1 கப் சேர்த்து கின்டவும். அத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து திரண்டு வருமளவு கின்டவும். கடைசியாக நெய்யில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைப்பூ அல்வா தயார். நீங்களும் வீட்டில் செஞ்சுப்பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.
மொறு மொறு முருங்கைக்காய் பூரி:
செய்ய தேவையான பொருள்:
முருங்கைக்காய்-2
ஓமம்- சிறிதளவு.
கோதுமை மாவு-1 கப்.
உப்பு- சிறிதளவு.
எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் முருங்கைக்காய் 2 நன்றாக வேகவைத்து கொள்ளவும். இப்போது அதிலிருக்கும் சதையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். முருங்கைக்காய் சதையை மிக்ஸியில் போட்டு அடித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது கோதுமை மாவு 1 கப், அத்துடன் சிறிது ஓமம், இப்போது முருங்கைக்காய் சதையை இத்துடன் சேர்த்து உப்பு சிறிது சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்துக்கொள்ளவும். இப்போது பூரிக்கு உருட்டுவது போலவே உருட்டி எண்ணெயை மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு அதில் போட்டு எடுக்கவும். இப்போது சுவையான மொறு மொறு முருங்கைக்காய் பூரி தயார். சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும் இந்த முருங்கைக்காய் பூரி.