நாம் பயன்படுத்தாமல் தூக்கியெறியும் பாகற்காய் விதைகளிலும் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவ்விதைகள் இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. இது சுவையில் கசப்பாக இருந்தாலும் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. இவ்விதைகள் புற்றுநோயை எதிர்க்கும் மூலப்பொருளாகவும் செயல்படுகிறது மற்றும் எடை இழப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது, பாகற்காய் விதைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. இவ்விதைகளை பல்வேறு உணவு வகைகளில் சேர்த்து பயன் பெறலாம். ஆரோக்கியம் தரும் பாகற்காய் விதை பச்சடி கசப்பே தெரியாமல் நன்கு சுவையுடன் இருக்கும்.
தேவை:
பாகற்காய் விதை மற்றும் உள் சதைப் பகுதி- 1கப், வறுத்த எள்- 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் தலா- 1 டீ ஸ்பூன்,பெருங்காயம் –சிறிது கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி புளி-சிறிது எண்ணெய் - 2 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு வெல்லம்- சிறிது.
செய்முறை:
ஒரு ஸ்பூன் எண்ணெயில் பாகற்காய் விதையை நன்கு வதக்கி தனியே வைக்கவும். வாணலியில் மீதமுள்ள எண்ணெயை விட்டு பருப்பு வகைககள், சீரகம், பெருங்காயம், வரமிளகாயை போட்டு சிவக்க வறுத்து எடுத்து அதனுடன் வதக்கிய பாகற்காய் விதை, வறுத்த எள், புளி, உப்பு, வெல்லம் மற்றும் மல்லி தழை சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்தெடுக்கவும்.
இந்த விதைப் பச்சடி நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது. வயிற்றில் உள்ள புழுக்களையும் அழிக்கும். கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்கள் பாகற்காய் விதைகள் சேர்த்து சமைத்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.