சோள உருண்டை சோறு:
தேவையான பொருட்கள்:
வெள்ளை சோளம் 1/4 கிலோ
தண்ணீர் 4 கப்
சின்ன வெங்காயம் 1/2 கப்
உப்பு
சாம்பார் பொடி 1 ஸ்பூன்
நெய் ரெண்டு ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
சோளத்தை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சோளத்தை போட்டு நான்கு கப் தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து வேகவிடவும். நான்கு விசில் வந்ததும் அடுப்பை சிறியதாக்கி ஐந்து நிமிடங்கள் வைத்துவிட்டு அணைத்து விட சோளம் பதமாக வெந்திருக்கும்.
வாணலியில் சிறிது நெய்யும் ரெண்டு ஸ்பூன் எண்ணெயும் விட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சாம்பார் பொடியும் போட்டு கிளறி விடவும். இதில் வேகவைத்த சோளத்தை சேர்த்து தேவையான உப்பும் போட்டு கலந்து விட அருமையான மிகவும் ருசியான சோள சோறு தயார். நன்கு ஆறியதும் உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இந்த சோள உருண்டைச் சோறுடன் முருங்கை இலை சாம்பார் தோதாக இருக்கும்.
முருங்கை இலை சாம்பார்:
துவரம் பருப்பு 1/2 கப்
காய்ந்த மிளகாய் 6
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
புளி சின்ன நெல்லிக்காயளவு முருங்கை இலை ஒரு கப்
(ஆய்ந்தது)
சின்ன வெங்காயம் 20
துவரம் பருப்புடன் மிளகாய், புளி மூன்றையும் சேர்த்து தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு இதனை சீரகம்,உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் கடுகு, கருவேப்பிலை, சிறிது உளுத்தம் பருப்பு சேர்த்து நல்லெண்ணையில் தாளித்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து அதற்கு தகுந்த உப்பு போட்டு வதக்கவும். சின்ன வெங்காயம் நன்கு வதங்கியதும் ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகளை சேர்த்து கிளறவும். சுருண்டு வரும்போது 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை தாராளமாக தண்ணீர் சேர்த்து கரைத்து கொதிக்கும் முருங்கை இலை சின்ன வெங்காய கலவையில் சேர்த்து கிளறவும். தேவையான உப்பை போட்டு இரண்டு கொதி கொதித்ததும் அடுப்பை அணைத்து விட மிகவும் சத்தான, ருசியான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி.
சோள உருண்டை சோறுடன் முருங்கை இலை சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.