அன்று பெண் ருதுவானால் முதலில் அவளுக்கு சமைத்து தருவது இந்த சோறுதான். ஏனெனில் பருப்பில் உள்ள புரத சத்துக்கள்.
இன்று திடீரென விருந்தினர் வந்துவிட்டாலோ அல்லது வேலைகள் அதிகமிருந்தாலோ இந்த அரிசிம்பருப்பு சோறு தான் கை கொடுக்கிறது. இதை செய்து நாலு அப்பளம் பொரித்து விட்டால் வயிறு நிறைந்து விடும். சத்து மிகுந்த இதை எளிதாக எப்படி செய்வது எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 ஆழாக்கு
துவரம்பருப்பு - 1/2 ஆழாக்கு
சின்ன வெங்காயம் - 10
தக்காளி- 1 பெரியசைஸ்
பூண்டு - 8 பற்கள்
தனியா - சிறிது
சீரகம் மிளகு - தலா 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- சிறிது
சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி - சிறிது
உப்பு- தேவைக்கு
பெருங்காயம்- சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அரிசியையும் பருப்பையும் நன்றாகக் கழுவி ஊறவைக்கவும். அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் கறிவேப்பிலை போட்டுத் தாளித்து இரண்டாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்கு வதக்கி அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். உடன் பூண்டு இரண்டும் தட்டி வதக்கலாம். வாசமாக இருக்கும். இவை நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்த்து அரிசி பருப்பு வேகும் அளவுக்கு ( இதற்கு மூன்றரை டம்பளர் நீர் விடலாம்) நீர் விட்டு மூடவும். நீர் கொதிப்பதற்குள் மிக்சியில் மிளகு, சீரகம், மீதமுள்ள பூண்டு, தனியா விதைகள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு ஒன்றரண்டாக அரைத்து கொதிக்கும் நீரில் அரிசி பருப்புடன் போட்டு தேவையான உப்பு சேர்த்து மூடி வைக்கவும். இரண்டு அல்லது 3 விசில் வந்ததும் இறக்கி ஆறியதும் பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி விட்டு இளகி உள்ள போதே சூடாகத் தட்டில் போட்டு நெய்யூற்றித் தந்தால் சீக்கிரம் தட்டு காலியாகும். வயிறு நிறையும்.
குறிப்பு - காரம் தேவை என்றால் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கலாம். இந்த சாதத்தை சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் நல்லது. ஆறிவிட்டால் பருப்பு இறுகி விடும்.