

கேக் என்றாலே முட்டையை பயன்படுத்திதான் நாம் செய்து வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக முட்டை சேர்க்காமல் பால் மட்டும் வைத்து பால் கேக் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். இது ஒரு புதுவிதமான சுவையில் நன்றாக இருக்கும்.
மேலும் பாலில் அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. கால்சியம், புரோட்டீன், வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் பாலில் நிறைந்துள்ளன. பாலில் உள்ள அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகளைப் பலப்படுத்துகிறது. இதில் உள்ள உயர்தர புரதம் தசை வளர்ச்சிக்கு திசுக்களை மீட்டெடுக்கவும் உதவுகிறது.
மேலும் பால் உடல் அழகிர்க்கும் முகப் பளபளப்பிற்கும் உதவுகிறது. பாலின் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். உடலுக்கு உடனடி ஆற்றலை தரக்கூடியது மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
பசும்பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 800 கிராம்
எலுமிச்சம்பழம் - 1
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
செய்முறை:
ஒரு அடி கனமான அகலமான சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். இரண்டு லிட்டர் பசும்பாலை அதில் ஊற்றி ஒரு லிட்டர் வரும் வரை நன்கு அடிப்பிடிக்காதவாறு கலந்து கொண்டிருக்கவேண்டும். இந்த ரெசிபி செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இரண்டு லிட்டர் பால் ஒரு லிட்டர் பால் அளவிற்கு வெந்து வந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் 800 கிராம் சர்க்கரை (சீனி) ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அரைத்து பாலுடன் கலந்து அடிப்பிடிக்காதவாறு நன்கு கிளரி கொடுக்க வேண்டும்.
ஒரு முழு எலுமிச்சம் பழத்தின் சாறை பாலுடன் சேர்க்க வேண்டும். பால் திரிந்து வரத்தொடங்கும் அப்பொழுது வெப்பத்தை குறைவாக வைத்து நன்கு கிளறி கொடுக்க வேண்டும். நன்கு சுருங்கி வரும் வரை காத்திருக்கவும் . நன்கு கெட்டியாக சுருங்கி வந்தவுடன் அதே சூட்டில் ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூடி வைக்கவேண்டும். அரைமணி நேரம் கழித்து எடுத்து அதனை ஒரு பிளேட்டிற்கு மாற்றி கேக் பக்குவத்தில் கட் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பால் கேக் தயார்.
இந்தப் பால் கேக் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும் நாம் வீட்டிலேயே பசும்பால் வைத்து செய்வது மிகுந்த ஆரோக்கியம் உடையதாக இருக்கும். இதில் எந்தவித ஃபுட் கலரும் சேர்க்கப்படாததால் இதனால் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.