

உடல் எடையைக் குறைக்கும் தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, கலோரி குறைவான அதே சமயம் வயிறு நிரம்பக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். தினமும் ஒரே மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு, காளான் ஒரு மிகச்சிறந்த மாற்று உணவாகும்.
இதில் கொழுப்பு மிகவும் குறைவு, ஆனால் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகம். நிறைய நேரம் செலவழிக்காமல், வெறும் பத்தே நிமிடத்தில் பூண்டு மற்றும் வெண்ணெயின் கமகமக்கும் மணத்தோடு ஒரு அட்டகாசமான "கார்லிக் மஷ்ரூம்" எப்படிச் செய்வது என்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 200 கிராம்
பூண்டு - 10 முதல் 12 பற்கள்
பெரிய வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் / சமையல் எண்ணெய் - 1 டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - ½ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி.
செய்முறை!
முதலில் காளானைச் சரியாகச் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். காளானை ஒருபோதும் தண்ணீரில் போட்டு ஊறவைக்கக் கூடாது; அப்படிச் செய்தால் அது ஸ்பாஞ்ச் போலத் தண்ணீரை உறிஞ்சிவிடும். ஒரு ஈரத் துணியால் காளானைத் துடைத்து எடுக்கலாம் அல்லது லேசாகத் தண்ணீரில் அலசிவிட்டு உடனடியாகத் துடைத்துவிட வேண்டும். காளான்களைப் பாதியாகவோ அல்லது சற்றுப் பெரிய துண்டுகளாகவோ நறுக்கிக்கொள்ளவும்.
இப்போது ஒரு அகலமான பேன் அல்லது கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடாக்கவும். அதில் ஆலிவ் ஆயில் மற்றும் வெண்ணெயைச் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டினைச் சேர்த்து வதக்கவேண்டும். பூண்டின் நிறம் லேசாக மாறி, அதன் முழு வாசனையும் வெண்ணெயில் இறங்கும் வரை மிதமான தீயில் வதக்குவதுதான் இந்த உணவின் முதல் ரகசியம்.
பூண்டு வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். இப்போது நறுக்கி வைத்துள்ள காளான்களை கடாயில் சேர்த்து, அடுப்பை அதிக தீயில் வைக்க வேண்டும். காளான் எண்ணெயில் வதங்கும்போது நிறையத் தண்ணீரை வெளியேற்றும். அந்தத் தண்ணீர் முழுமையாக வற்றி, காளான் வெண்ணெயில் சுருண்டு வரும் வரை வதக்க வேண்டும். இதற்கு சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் ஆகும்.
காளானில் உள்ள தண்ணீர் முழுமையாக வற்றியதும், சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவேண்டும். மசாலாக்கள் காளானோடு நன்கு படியும்படி ஒரு நிமிடம் பிரட்டி விடவும். மசாலா கருகிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
அடுப்பை அணைப்பதற்கு முன், அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தாராளமாகத் தூவி ஒருமுறை மெதுவாகக் கலந்துவிடவும்.
கமகமக்கும் வாசனை மூக்கைத் துளைக்கும் "கார்லிக் மஷ்ரூம்" தயார். டயட்டில் இருப்பவர்கள் இதை அப்படியே ஒரு பவுலில் போட்டுச் சாப்பிடலாம் அல்லது சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாகவும் வைத்துக்கொள்ளலாம். இன்றே செய்து பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.