கோபால்பட்டி பால் பன் சாப்பிட்டு இருக்கீங்களா?

பால் பன்...
பால் பன்...

திண்டுக்கல் பூட்டுத் தயாரிப்பில் மிகவும் உலகப் புகழ் பெற்ற ஒரு ஊராகும். இங்கு தயாரிக்கப்பட்ட பூட்டுகள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் வாங்கி பயன்படுத்தப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த சிறுமலை வாழைப்பழம் மிகவும் புகழ் பெற்றது.

உணவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உணவு உண்டு. திருநெல்வேலி அல்வா. காஞ்சிபுரம் இட்லி. காரைக்குடி சீப்பு சீடை. மணப்பாறை முறுக்கு. சாத்தூர் காராசேவு. திருவில்லிபுத்தூர் பால்கோவா. இப்படி பல வகை உணவுகள் ஒவ்வொரு ஊருக்கும் பெருமை சேர்க்கின்றன. அதுபோலவே திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த கோபால்பட்டி என்ற சிற்றூரில் தயாரிக்கப்படும் “பால் பன்” என்ற உணவு மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இந்த உணவானது திண்டுக்கல் பகுதி மட்டுமின்றி மதுரை, தேனி முதலான பகுதிகளிலும் பிரபலமாக உள்ளது.

பால் பன் என்றால் பேக்கரி வகை உணவு என்றுதான் முதலில் தோன்றும். ஆனால் இதற்கும் பேக்கரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் பால் பன் என்பதால் பாலில் செய்யப்படும் ஒரு உணவு என்று நினைத்துக் கொள்ளதீர்கள். பாலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்புறம் இதை எதை வைத்துத்தான் செய்கிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வாருங்கள். பால் பன்னை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுவோம்.

ஒரு கிலோ மைதாமாவில் நூறு மில்லி தயிர் விட்டு பின்னர் போதிய அளவு தண்ணீர் மற்றும் சோடா உப்பைக் கலந்து நன்கு பிசைந்து அரைமணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை நல்லெண்ணெயில் பொரித்து எடுத்த பின்னர் சர்க்கரைப் பாகில் இட்டு சற்று நேரம் கழித்துப் பரிமாற வேண்டும். சிலர் பாகில் ஏலக்காயும் சுக்கும் வாசனைக்காக சேர்ப்பர். முற்காலத்தில் பாகு தயாரிக்க சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது பனைவெல்லத்தை உபயோகித்தார்கள். தற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்து போனதன் காரணமாக வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கான சுருக்கம் இல்லாத 8 கோடைக்கால பயண ஆடைகள்!
பால் பன்...

கோபால்பட்டியில் பலர் இந்த பால் பன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திண்டுக்கல்லிலும் பல இடங்களில் பால் பன் கிடைக்கிறது. தேனி, கம்பம், கூடலூர், மதுரைப் பகுதிகளில் பலர் பால் பன்னை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் இதன் சுவை அலாதியானது.

கோபால்பட்டி திண்டுக்கல்லில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திண்டுக்கல்லுக்குச் சென்றால் மறக்காமல் பால் பன்னை வாங்கி சுவைத்து மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com