உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு சப்பாத்தி. ஏன் குழந்தைகள் கூட சப்பாத்தியை அதிகம் விரும்புகின்றனர். அப்படிப்பட்ட சப்பாத்தி சாஃப்ட்டாக வரவில்லையே என்பதே பலரின் கவலையாகும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முதலில் தேவையான அளவிற்கு கோதுமை மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதனால் சப்பாத்தி சுடும் பொழுது ஆங்காங்கே பிரவுன் நிறத்துடன் பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் நன்றாக வெந்து வரும்.
மாவு பிசையும் போது கவனமாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவு பிசைந்த பிறகு அவற்றின் மீது எண்ணெய் ஊற்றி தடவிக் கொள்ள வேண்டும்.. ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்வதால் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். முக்கியமாக எந்த அளவுக்கு நாம் அழுத்தம் கொடுத்து மாவை பிசைகிறோமோ அந்த அளவிற்கு சப்பாத்தி மிருதுவாக வரும்.
எனவே சப்பாத்தி மாவை நன்கு அழுத்தம் கொடுத்து பிசையவும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஒரு வாழைப்பழத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, மாவு பிசையும்போது சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்தால், மாவு பிசைந்து எவ்வளவு நேரம் ஆனாலும் சப்பாத்தி சாஃப்ட்டாக வருவதோடு, சுவையாகவும் இருக்கும். இப்போது பிசைந்த மாவை அப்படியே விட்டு ஒரு ஈரத் துணியில் காற்று புகாதவாறு மூடி வைத்துக் கொள்ளவும். பிறகு 2 மணி நேரம் கழித்து உருண்டை பிடித்து தேய்த்து சுட்டு சாப்பிட்டால் சப்பாத்தி பூ போல் இருக்கும்.