வார இறுதி நாட்களில் காலை அல்லது இரவு உணவிற்கு பூரி செய்வது வழக்கம். ஆனால், ஒவ்வொரு முறையும் அந்தப் பூரிக்குத் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு மசாலா அல்லது குருமா செய்ய வேண்டுமே என்ற சலிப்பு பலருக்கும் வரும். அதேபோல், வழக்கமான வெள்ளை நிறப் பூரியைச் சாப்பிட்டு குழந்தைகளுக்கும் அலுத்துப் போயிருக்கும். இந்த இரண்டு பிரச்சனைக்கும் ஒரே தீர்வு, காரசாரமான சுவையில் சுடச்சுடச் செய்யப்படும் மசாலா பூரி தான்.
மாவில் சேர்க்கப்படும் சீரகம், மிளகாய்த் தூள் மற்றும் கஸ்தூரி மேத்தியின் மணம், இதை சைட் டிஷ் எதுவுமே இல்லாமல் அப்படியே சாப்பிடத் தூண்டும். எண்ணெய் குடிக்காமல், பலூன் போல உப்பலான இந்த கரகரப்பான ரெசிபியை வீட்டிலேயே 10 நிமிடங்களில் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டேபிள் ஸ்பூன்
சூடான எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சமையல் எண்ணெய் - பொரித்து எடுக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை!
பூரி எண்ணெய் குடிக்காமல், உப்பலாக வருவதற்கு மாவு பிசையும் பக்குவம்தான் மிக முக்கியம். முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் ரவையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ரவை சேர்ப்பதால் பூரி நீண்ட நேரம் மொறுமொறுப்பாக இருக்கும். இத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சீரகம், ஓமம் மற்றும் கஸ்தூரி மேத்தியைச் சேர்த்து, உலர்ந்த நிலையிலேயே நன்றாகக் கலக்க வேண்டும்.
இப்போது இதில் ஒரு ஸ்பூன் சூடான எண்ணெயை ஊற்றி, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவை விடச் சற்று தடிமனாக பிசைய வேண்டும். மாவை 10 நிமிடம் மட்டும் மூடி வைக்கவும்; அதிக நேரம் ஊறினால் மாவு தளர்ந்து எண்ணெய் குடிக்கும்.
மாவு ஊறியதும் அதிலிருந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். மாவில் தொட்டுத் தேய்ப்பதற்குப் பதிலாக, சப்பாத்தி பலகையில் லேசாக எண்ணெய் தடவி, வட்டமாகத் தேய்க்க வேண்டும். பூரி மிகவும் மெல்லியதாக இருக்கக் கூடாது; சற்று தடிமனாக இருந்தால்தான் நன்றாக உப்பி வரும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து தாராளமாக எண்ணெய் ஊற்றி அதிக சூட்டில் காயவிடவும்.
எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள மாவை உள்ளே போட்டு, ஒரு கரண்டியால் அதன் மேல் லேசாக அழுத்திக் கொடுத்தால், பலூன் போலப் புஸ்ஸென்று மசாலா பூரி உப்பி வரும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாகச் சிவந்ததும் எடுத்தால், வீடு முழுவதும் மசாலா வாசம் கமகமக்க, அட்டகாசமான மொறுமொறு மசாலா பூரி தயார்.
இதற்குத் தொட்டுக்கொள்ள ஒரு ஸ்பூன் மாங்காய் ஊறுகாயோ அல்லது தயிர்ப்பச்சடியோ மட்டுமே போதும். லஞ்ச் பாக்ஸிற்குக் கட்டிக் கொடுத்தாலும் மதியம் வரை கரகரப்பு குறையாத இந்த சூப்பரான ரெசிபியை, இன்றே உங்கள் வீட்டில் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்.