கடையில் வாங்கும் ஊறுகாயை விட வீட்டில் செய்யும் ஊறுகாய் மிகவும் ருசியாகவும் எந்த பிரிசர்வேட்டிவ் இல்லாமலும் இருப்பதால் உடல் நலத்திற்கு எந்த தீங்கும் விளைவிக்காது. கல்யாண வீட்டில் போடப்படும் ஊறுகாய் ஒரு இன்ஸ்டன்ட் ஊறுகாயாகும். இது செய்வது மிகவும் எளிது.
இந்த பச்சை மாங்காய் ஊறுகாய் தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
வெந்தய மாங்காய்:
மாங்காய் 2
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
காரப்பொடி 4 ஸ்பூன்
வெந்தயப்பொடி 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் கால் கப்
எந்த ஊறுகாய்க்கும் நல்லெண்ணெய் தான் சிறந்தது. வெறும் வாணலியில் 50கி.வெந்தயத்தை போட்டு நன்கு சூடு வர வறுத்து சிறிது ஆறியதும் மிக்சியில் பொடித்து வைத்துக்கொள்ள எல்லா ஊறுகாய் வகைகளுக்கும், சாம்பார் செய்து இறக்கும் சமயம் ஒரு ஸ்பூன் போடவும் வசதியாக இருக்கும்.
மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் உப்பு, காரப்பொடி, வெந்தயப்பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து மாங்காயில் கொட்டி உப்பு காரம் எல்லா இடத்திலும் படும்படி நன்கு கலந்து விட கல்யாண வீட்டு வெந்தய மாங்காய் ஊறுகாய் தயார்.
கேரளா ஸ்டைல் பீட்ரூட் உப்பேரி/தோரன்
பீட்ரூட் 2
சின்ன வெங்காயம் 6
உப்பு தேவையானது
தேங்காய் துருவல் 1 கப்
பச்சை மிளகாய் 1
சீரகம் அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, மிளகாய் 2,
தேங்காய் எண்ணெய் சிறிது
பீட்ரூட்டை தோல் நீக்கி கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் துருவிய பீட்ரூட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
மிக்ஸியில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் சிறிது கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வதக்கிய பீட்ரூட்டுடன் சேர்த்து கிளறி இறக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். மிகவும் அருமையான கேரள ஸ்டைல் தோரன் தயார். செய்துதான் பாருங்களேன்!