

மைசூர்பாகு – நெய் மணம் கமழும் இனிப்பு!
பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வரும் இனிப்புகளில் மைசூர்பாகும் ஒன்று. பொன்னிறமாக ஜொலிக்கும் தோற்றம், நெய் மணம் நிறைந்த சுவை, வாயில் போட்டவுடன் கரையும் மென்மை – இவையெல்லாம் சேர்ந்து இதை அனைவருக்கும் பிடித்த இனிப்பாக மாற்றியிருக்கின்றன.
கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகிய சில பொருட்களே போதும் என்றாலும், சரியான பக்குவத்தில் செய்தால் கடையிலேயே வாங்கியது போல அருமையாக இருக்கும். தீபாவளி, திருமணம், குடும்ப விழாக்கள் என்று எந்த விசேஷமாக இருந்தாலும் மைசூர்பாகுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு.
நாமும் வீட்டிலேயே சுவையான, நெய் மணம் கமழும் மைசூர்பாகை செய்து அசத்தலாமா? வாருங்கள், அதன் எளிய செய்முறையைப் பார்ப்போம்.
மைசூர்பாகு (Mysore Pak) செய்முறை
தேவையான பொருட்கள்:
கடலை மாவு (Besan) – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1½ கப்
எண்ணெய் – ½ கப் (விருப்பத்திற்கேற்ப;
முழுவதும் நெய்யும் பயன்படுத்தலாம்)
செய்முறை:
கடலை மாவை சலித்து, கட்டிகள் இல்லாமல் வைத்துக்கொள்ளவும்.
நெய் மற்றும் எண்ணெயை ஒன்றாகக் கலந்து லேசாக நெய் கரையும் வரை சூடாக்கி வைத்துக்கொள்ளவும்.
நெய்+ஆயில் கலவையில் பாதி அளவு எடுத்து ஒரு கப்பில் ஊற்றி அதில் கடலை மாவை கட்டிகள் இல்லாமல் கலந்துவைக்கவும்
ஒரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரையுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும்.
சர்க்கரை கரைந்து வந்ததும் தீயை மிதமாக வைத்து, ஆயில் கலவையில் உள்ள கடலை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
பின்னர் மீதமுள்ள சூடான நெய்-எண்ணெய் கலவையை சிறு சிறு அளவாக ஊற்றி தொடர்ந்து கிளறவும். கலவை பொங்கி, நுரை வந்து, பாத்திரத்தின் ஓரங்களில் இருந்து பிரியத்தொடங்கும்.
உடனே நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பவும்.
5–10 நிமிடங்கள் கழித்து விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக வெட்டவும். முழுமையாக ஆறியதும் எடுத்துப் பரிமாறவும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
மென்மையான மைசூர்பாகுக்கு நெய்யின் அளவை அதிகப்படுத்தலாம். மிதமான தீயில் வைத்து கிளறவேண்டும்.
கலவை தளர்வாக இருக்கும்போதே தட்டில் ஊற்றி சமன்படுத்திவிட வேண்டும்.