பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு சுவையான புரோட்டின் சத்து மிகுந்த சீராளம் செய்து கொடுக்கலாம். அந்த காலத்தில் எல்லாம் டோக்ளா போல் துண்டுகள் போட்டு செய்யாமல் உதிர்த்து உசிலி போல் செய்து கொடுப்பார்கள். மிகவும் ருசியாக இருக்கும். இதனை காலை, இரவு டிபனாகவோ, ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவோ செய்து கொடுக்கலாம்.
சீராளம்:
பச்சரிசி ஒரு கப்
துவரம்பருப்பு ஒரு கப்
கடலைப்பருப்பு ஒரு கப்
பாசிப்பருப்பு ஒரு கப்
மிளகாய் 10 அல்லது 12
(காரத்திற்கு தகுந்தாற்போல்)
பூண்டு பற்கள் 6
இஞ்சி ஒரு துண்டு
பெருங்காயத்தூள்
வெங்காயம்
கறிவேப்பிலை
உப்பு
நல்லெண்ணெய் 4 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
கொத்தமல்லி
தேங்காய் துருவல்
மஞ்சள்தூள்
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை
முதலில் அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பயித்தம் பருப்பு எல்லாவற்றையும் போட்டு நீர் விட்டு களைந்து அதில் மிளகாய் போட்டு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு 2 மணி நேரம் ஊற விடவும். பிறகு அதனை பூண்டு, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான நீர் விட்டு விழுதாக இல்லாமல் கொரகொரவென்று அடைக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ளவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு இட்லி தட்டில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய் தடவி மாவை ஊற்றி இட்லிகளாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அவற்றை ஆறியதும் கத்தியால் சின்ன சின்ன துண்டுகள் போடவும்.
இப்பொழுது வாணலியில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன், நெய் 2 ஸ்பூன் விட்டு கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதற்கு தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதங்கியதும் கத்தியால் நறுக்கி வைத்த துண்டங்களை சேர்த்து நன்கு கிளறவும். அதில் தேங்காய் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். மிகவும் சத்தான ருசியான சீராளம் தயார்.
அக்கார அடிசில்
சர்க்கரை பொங்கல் என்பது நீரில் வேகவைத்து வெல்லப்பாகு போட்டு செய்யப்படுவது. ஆனால் அக்கார அடிசில் என்பது அரிசியை நீரில் வேக வைக்காமல் பாலில் வேகவைத்து செய்வதால் சுவை கூடுதலாக இருக்கும்.
பச்சரிசி ஒரு கப்
பயத்தம் பருப்பு 1/2 கப்
பால் 5 கப்
வெல்லம் 2 கப்
சர்க்கரை 1 கப்
முந்திரிப்பருப்பு
திராட்சை
நெய் 1/2 கப்
ஏலப்பொடி 1ஸ்பூன்
வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து சூடு வரும் வரை வறுத்து அதில் பால், தண்ணீர் ஒரு கப் விட்டு கொதி வந்ததும் சூடு செய்த அரிசி பருப்பு கலவையை சேர்த்து ஒரு பாத்திரத்துக்கு மாற்றி குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் அணைத்து விடவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைக்கவும். வெந்த அரிசி கலவையை கரண்டி கொண்டு நன்கு குழைவாக மசிக்கவும். இதில் சிறிது நெய் விட்டு சர்க்கரை, வெல்லக் கரைசல் (நீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்) சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமாகக் கிளறவும். அவ்வப்போது சிறிது சிறிதாக நெய் சேர்த்து நன்கு சுருண்டு வந்ததும் இறக்கி வறுத்த முந்திரி, திராட்சையை சேர்த்து விட அபாரமான ருசியில் அக்கார அடிசில் தயார்.
பாலில் வேகவைத்ததால் நல்ல மணமும் ருசியும் கூடுவதுடன் நெய்யின் மணமும் சேர்ந்து சூப்பராக இருக்கும்.