
கதம்பச் சோற்றில், சத்து நிறைந்த பலவகை காய்கறிகள் கலந்திருக்கும். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். சிப்ஸ், பொரித்த அப்பளாம் ஆகியவைகளை கதம்பச் சோறுக்கு சைட் - டிஷ்ஷாக வைத்துக் கொண்டாலும், பீர்க்கங்காய் பச்சடி அம்சமாக இருக்கும். இரண்டு டிஷ்களையும் நாம் காணலாம்.
கதம்பச் சோறு
தேவை:
நல்ல புலாவ் அரிசி 1/2 கிலோ
வெங்காயம் (தோல்நீக்கியது) 2
உருளைக் கிழங்கு 2
கத்தரிக்காய் 2
அவரைக்காய் 50 கிராம்
பீன்ஸ் 50 கிராம்
முருங்கைக்காய் 2
கேரட் 2
பட்டாணி (உரித்தது) 50 கிராம்
புளி பெரிய எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
உப்பு தேவையானது
தண்ணீர் தேவையானது
நெய் 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் சிறிது
மசாலாவிற்கு
மிளகாய் வற்றல் 6
மிளகு 1 டீஸ்பூன்
தனியா 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 2 டீஸ்பூன்
லவங்கப்பட்டை 1 சிறு துண்டு
மராட்டி மொக்கு 1
கிராம்பு 4
ஏலம் 4
ஃப்ரெஷ் தேங்காய்த்துருவல் 1/2 கப்
நெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
அடிகனமான வாணலியை வைத்து, நெய்விட்டு சிறிது காய்ந்ததும், மசாலாப் பொருட்களை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். நன்கு ஆறிய பிறகு, மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைக்கவும். காய்கறிகள் அனைத்தையும் நன்கு அலம்பி சிறு துண்டுகளாக நறுக்கி அடிக்கனமான பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர்விட்டு கேஸ் ஸ்டவ்வின் மீது வைத்து, அடுப்பை மிதமாக எரியவிடவும். பாதி வேகையில், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். புளியைக் கரைத்துவிடவும்.
முக்கால் பகுதி வெந்தபின், அரைத்து விழுதாக வைத்திருக்கும் மசாலாவைக் கலக்கவும். கொதித்து வருகையில், வெல்லத்தைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து கெட்டியானதும் கீழே இறக்கி, இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையில், சிறிது கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
புலாவ் அரிசியை நன்றாக அலம்பி, உதிரியாக வடித்து தட்டில் கொட்டி ஆறவிடவும். பின்னர் இதன் மீது, காய்கறி மசாலா கலவையை பரவலாக விட்டு, நெய் சேர்த்து பிசிறி எடுக்க கம-கம கதம்பச் சோறு ரெடி.
பீர்க்கங்காய் பச்சடி
தேவை:
பீர்க்கங்காய் 1/4 கிலோ
(தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் 10
(தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் 4 (நீள வாக்கில் நறுக்கியது)
கறிவேப்பிலை கொஞ்சம்
சிறிது வேகவைத்த துவரம் பருப்பு 1 கப்
புளிக்கரைசல் 3 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
எண்ணெய் 2 டீஸ்பூன்
கொத்தமல்லி (ஃப்ரெஷ்) கொஞ்சம்
வெல்லம் சிறு துண்டு
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்தபின், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், பீர்க்கங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியதும், வேகவைத்த துவரம்பருப்பு, புளிக்கரைசல் மஞ்சள்பொடி, ஆகியவைகளைப் போட்டு வேகவிடவும். நன்றாக வெந்தவுடன், வெல்லம் சேர்த்து மிக்ஸ் செய்த பிறகு, கொத்தமல்லி இலைகளைப் பரவலாகத்தூவி கீழே இறக்கவும்.
கதம்பச் சோறுடன், பீர்க்கங்காய் பச்சடியைச் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.