காசி அல்வாவை பூசணி அல்வா என்றும் அழைப்பார்கள். இது பாரம்பரியமாக செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும். இதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உண்மையிலேயே நமக்கு பல வகைகளில் உதவுகிறது. எளிமையாக பூசணிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் இந்த அல்வாவை பண்டிகை நாட்கள், கொண்டாட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது பலர் விரும்பி உண்கின்றனர். இந்த சுவையான இனிப்பு வகையை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
500 கிராம் வெள்ளை பூசணிக்காய்
1 கப் சர்க்கரை
½ கப் நெய்
ஒரு கைப்பிடி முந்திரி மற்றும் திராட்சை
ஏலக்காய் தூள் சிறிதளவு
செய்முறை:
முதலில் பூசணிக்காயை நன்கு கழுவி அதன் தோலை சீவி கொட்டைகளை அகற்றவும். பின்னர் பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயில் நெய்யை ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சைகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் அவற்றை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் அரைத்த பூசணிக்காயை சேர்த்து சில நிமிடங்கள் வேக விடுங்கள்.
பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். இச்சமயத்தில் குறைந்த வெப்பத்தில் வைத்து பூசணிக்காய் கலவை அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பூசணிக்காய் வேகும்போது அதன் இயற்கையான சாறுகள் வெளியேறி கண்ணாடி போல மாறிவிடும்.
அடுத்ததாக இந்த பூசணிக்காய் கலவை அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும். இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து அலங்கரித்தால், சுவையான காசி அல்வா தயார். இதை அப்படியே வானலியில் இருந்து எடுத்து சூடாகப் பரிமாறி அனைவரையும் அசத்துங்கள்.