தினை இடியாப்பம்
தேவை:
தினை _1 கப் + போதுமான அளவு உப்பு
எண்ணெய் _1ஸ்பூன்
செய்முறை:
தினையை கழுவி சுத்தப்படுத்தி ஒரு இரவு ஊறவிடவும். மறுநாள் காலையில் ஊறிய தினையை தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.
பின்னர் அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நைசாக அரைத்த மாவை கொட்டி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறி கிண்டி மாவு உருண்டு கெட்டியாக வரும் போது கையில் தண்ணீர் தொட்டு மாவை எடுத்தால் கையில் ஒட்டாத பக்குவத்தில் அடுப்பை அணைத்து இறக்கி கை பொறுக்கும் சூட்டில் மாவை உருண்டைகளாக எடுத்து இடியாப்ப அச்சில் வைத்து இடியாப்ப தட்டில் பிழிந்து ஆவியில் 10 நிமிடம் வேக விடவும். சூப்பர் சுவையுட னும், சத்துடனும் இருக்கும் தினை இடியாப்பத்தை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். தொட்டு சாப்பிட தேங்காய் பால், வெல்லத்தூள் வைத்து கொள்ளலாம்.
மீதி வரும் தினை இடியாப்பத்தை ஃபிரிட்ஜில் வைத்து மாலையில் ஸ்னேக்ஸ் கொடுக்க நூடில்ஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து அசத்தலாம்.
தினை நூடுல்ஸ் செய்ய:
தேவையான பொருட்கள்:
ஃப்ரிட்ஜில் வைத்த தினை இடியாப்பம் _2
பெரிய வெங்காயம்_1
குடை மிளகாய்_2
பூண்டு _1 பல்
எண்ணெய் _2 ஸ்பூன்
சில்லி ஸாஸ் _11/2ஸ்பூன்
செய்முறை:
முதலில் இடியாப்பத்தை உதிரி உதிரியாக உதிர்த்து எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கி நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், போட்டு நன்கு வதக்கி,சில்லி ஸாஸ் சேர்த்து கிளறி இத்துடன் உதிர்த்து வைத்த இடியாப்பத்தை கலந்து ஒன்றோடொன்று சரியாக சேர்ந்து வர பிரட்டி எடுக்க வேண்டும். குழந்தைகள் விரும்பி உண்ணும் தினை நூடில்ஸ் ரெடி.
பச்சை பயிறு இடியாப்பம்
தேவை:
பச்சைப்பயிறு _ 1 கப்
போதுமான அளவு உப்பு
எண்ணெய் _1 ஸ்பூன்
செய்முறை:
பச்சைப் பயிறை கழுவி எடுத்து ஒரு இரவு ஊற வைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டியில் வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்த பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அடிகனமான வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இந்த மாவைக் கொட்டி ஒரு கப் தண்ணீரில் மிக்ஸி ஜாரைக் கழுவி இத்துடன் ஊற்றி மிதமான தீயில் வைத்து போதுமான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும். அல்வாவிற்கு திரண்டு வருவது போல் மாவு திரண்டு உருண்டு கெட்டியாகி விடும். கையில் ஒட்டாத பக்குவத்தில் தீயை அணைத்து விடவும்.
மாவு சிறிது ஆறி கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது கையில் எண்ணெய் தொட்டு மாவை எடுத்து இடியாப்ப அச்சில் உருண்டைகளாக உருட்டி போட்டு இடியாப்பம் பிழிந்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். 10 நிமிடத்தில் வெந்துவிடும். மிருதுவான, வித்தியாசமான நிறத்தில் பச்சை பயிறு இடியாப்பம் ரெடி.
இத்துடன் தேங்காய் சட்னி தண்ணியாக வைத்து தொட்டு சாப்பிட மிகவும் சுவையாகவும், சத்தாகவும், செய்வதற்கு எளிதாகவும் இருக்கும்.