மதுரையில் மிகவும் பிரபலமான சாலையோர உணவுகளில் ஒன்றுதான் பைரி. இது சௌராஷ்டிரர்களால் செய்யப்படும் பாரம்பரிய உணவாகும். முள்ளு முருங்கை கீரை, நெஞ்சு சளி, இருமல், தொண்டை பிரச்னை போன்றவற்றை தீர்க்க கூடிய அருமருந்தாகும். சரி வாங்க, மதுரை பேமஸ் பைரியை எப்படி வீட்டிலேயே செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முள்ளு முருங்கை-1 கப்.
அரிசி-1 ½ கப்.
உளுந்து-1/4கப்.
எண்ணெய்- தேவையான அளவு.
மிளகு-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
பூண்டு-5
அரிசி மாவு- 1 ½ தேக்கரண்டி.
உப்பு- தேவையான அளவு.
பொடி செய்ய,
உளுந்து -2 தேக்கரண்டி.
மிளகு-1/2 தேக்கரண்டி.
சீரகம்-1/2 தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய்-1
பெருங்காய தூள்- சிறிதளவு.
உப்பு- தேவையான அளவு.
பொட்டுக்கடலை -1 தேக்கரண்டி.
செய்முறை விளக்கம்:
முதலில் முள்ளு முருங்கையின் நரம்பையெல்லாம் சுத்தப்படுத்திவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 1 ½ கப் அரிசி, ¼ கப் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
மிக்ஸியில் ஊர வைத்த அரிசி, முள்ளு முருங்கை கீரை, மிளகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, பூண்டு 5, உப்பு தேவையான அளவு சேர்த்து கெட்டியாக அரைத்து கொண்டு, இத்துடன் 1 ½ தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய வைக்கவும். அதற்குள் சிறிது மாவு எடுத்து கொஞ்சம் மொத்தமாகவே தட்டிக்கொண்டு, அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் மாவை போட்டு பூரி போல பொரித்து எடுக்கவும்.
இப்போது இந்த பூரி மீது தூவி சாப்பிட பொடி தயார் செய்துவிடலாம். உளுந்து 2 தேக்கரண்டி, மிளகு ½ தேக்கரண்டி, சீரகம் ½ தேக்கரண்டி, பெருங்காய தூள் சிறிதளவு, காய்ந்த மிளகாய் 1, பொட்டுக்கடலை 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து இவற்றையெல்லாம் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து பூரி மேலே தூவி சாப்பிடவும் சுவை சும்மா அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டில் ஒருமுறை செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததுன்னு சொல்லுங்க.