வேப்பம்பூ - இஞ்சி துவையல்:
வேப்பம்பூ நீரிழிவுக்கு நல்லது. குமட்டல், வாந்தி, மயக்கம், வயிற்றுப் பிரச்சனைகளை குணமாக்கும். பசியை உண்டாக்கும். பித்தத்தை போக்கும்.
இஞ்சி வயிற்றுப் பிரச்சினைகளுக்கு சிறந்தது. அஜீரண கோளாறு மூட்டு வலி, தலைவலியை போக்கும் தன்மை கொண்டது.
நெல்லிக்காய் விட்டமின் சி சக்தி நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
எல்லாவிதமான சுவையும் கொண்ட இந்த நவரச துவையலை செய்து சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிட வயிற்றுப் பிரச்சனைகள் தீருவதுடன் வாய்க்கும் ருசியாக இருக்கும்.
தேவையானவை:
வேப்பம்பூ 2 ஸ்பூன்
இஞ்சி துண்டு சிறிது
பெரிய நெல்லிக்காய் 2
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
உப்பு தேவையானது
புளி எலுமிச்சை அளவு
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
பெருங்காய பொடி சிறிது
வெல்லம் ஒரு துண்டு
செய்முறை:
வாண
லியில் உளுத்தம் பருப்பு, மிளகாய் இரண்டையும் சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அத்துடன் காய வைத்த வேப்பம்பூ 2 ஸ்பூன் சேர்த்து வறுக்கவும். தோல் நீக்கிய இஞ்சி துண்டு சிறிது, கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, பெரிய நெல்லிக்காயை கொட்டை எடுத்தது எல்லாவற்றையும் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும். சிறிது ஆறியதும் உப்பு, தேவையான அளவு புளி, வெல்லம் சேர்த்து அரைத்தெடுக்கவும். கடைசியாக நல்லெண்ணையில் கடுகு தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து கொட்ட சுவையான நவரச துவையல் ரெடி.
(நாட்டு மருந்து கடைகளில் காயவைத்த வேப்பம்பூ கிடைக்கும்.)
நெல்லிக்காய் - புதினா துவையல்:
மிகவும் சத்தான புதினா துவையல். புதினா, பசியை தூண்டும் வயிற்றுப் பிரச்சினைகளை சரி செய்யும். நெல்லிக்காய் ரத்தத்தை சுத்தப்படுத்தும். வயிற்றுப் புண்களை குணமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
தேவையானவை:
சிகப்பு மிளகாய் 2
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையானது
புளி சிறிது
நெல்லிக்காய் 2
புதினா ஒரு கைப்பிடி
செய்முறை:
உளுத்தம் பருப்பு, மிளகாய் இரண்டையும் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும். அதில் கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் இரண்டும், பச்சை மிளகாய், புளி, ஆய்ந்து சுத்தம் செய்த புதினா ஒரு கைப்பிடி, தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து வதக்கி சிறிது ஆறியதும் மிக்சியில் அரைத்தெடுக்க ருசியான துவையல் தயார்.
இதனை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.