-விக்னேஷ்பகவதி
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார் சமையலில் முக்கியமான மற்றும் அவ்வட்டாரம் சார் உணவாக வெள்ளைக் குழம்பு இருக்கின்றது. இதனை நாஞ்சில் பகுதியில் வெள்ளைக்கறி என்று கூறுவர்.
தேவையான பொருட்கள்:
· தேங்காய்
· சின்ன வெங்காயம்
· பல்லாரி (பெரிய வெங்காயம்)
· சீரகம்
· வத்தல் பொடி
· மஞ்சள் பொடி
· முருங்கைக்காய்
· கத்தரிக்காய்
· தக்காளி
· புளி
· மல்லிஇலை
· கருவேப்பிலை
· கடுகு
· வெந்தயம்
· காயம்
செய்முறை:
முதலில் எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் வெள்ளை குழம்புக்கு தேவையான காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய் ,தக்காளி சின்ன வெங்காயம் ஆகியவற்றை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும்.வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றை கண்டிப்பாக வதக்கவும். முருங்கைக்காய் வேண்டுமென்றால் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளலாம்.இப்பொழுது ஒரு முறி தேங்காய் நன்றாக திருகி வைத்துக் கொள்ளவும் .திருகிய தேங்காயுடன் ஒரு பெரிய வெங்காயம் இரண்டு ஸ்பூன் சீரகம் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வதக்கிய சின்ன வெங்காயம் கத்தரிக்காய் தக்காளியுடன் அவித்து வைத்துள்ள முருங்கைக்காயை சேர்த்து ஊறவைத்துள்ள புளி கரைசலையும் சேர்க்க வேண்டும். சேர்த்த கலவையை மஞ்சள்தூள் காயப்பொடி சேர்த்து அரைத்த தேங்காய் விழுதினையும் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கைப்பிடி மல்லி இலையை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து இறக்கியவுடன் ஒரு ஸ்பூன் எண்ணெயில் அரை டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலையுடன் சிறிது வெந்தயம் சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டவும். இப்பொழுது திருநெல்வேலி சமையலில் ஒன்றான வெள்ளை குழம்பு ரெடி. இருக்கு எல்லா காய்களின் பொரியல்களும் பொருத்தமாக இருக்கும்.
சின்ன வெங்காயம் கத்தரிக்காய் முருங்கைக்காய் குழம்புக்கு முக்கிய சுவையைக் கொடுக்கும் காய்கறிகள் ஆகும். இவை இல்லாத பட்சத்தில் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கி கூட செய்யலாம். நாஞ்சில் பகுதியில் வெள்ளரிக்காயை வெட்டிப்போட்டு குழம்பினை செய்பவர் அதை எரிசேரி என்று கூறுவர்.
படித்ததை பகிருங்கள்! ரசித்ததை ருசியுங்கள் …