
இந்த மாதத்தில் அதிகம் கிடைக்கும் மஞ்சள் மற்றும் வெள்ளை பூசணிக்காய்களில் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் A, C, K மற்றும் பல தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளதால், எடை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண்களின் ஆரோக்கியம் பேணவும், உடலின் நீர்ச்சத்தை பராமரிக்கவும், உடற்பயிற்சிக்குப் பிறகு எலக்ட்ரோலைட் சமநிலையை மீட்டெடுக்கவும் குறிப்பாக மலச்சிக்கலை நீக்கவும் வெகுவாக பயன்படுகிறது.
இதில் சாம் பூசணி எனப்படும் வெள்ளை பூசணிக்காயில் செய்யும் காசி அல்வா திருமண விருந்தில் நிச்சயம் இடம்பெறும் ருசியான இனிப்பு ஆகும். இங்கு சில பூசணிக்காயில் செய்யும் அல்வா வகைகள் (Pumpkin Halwa recipes) காண்போம்.
காசி அல்வா எனப்படும் பாரம்பரிய பூசணி அல்வா
தேவை:
பூசணிக்காய் – 2 கப்(துருவியது)
சர்க்கரை – 1 கப்
பால் – 1 கப்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை –தலா 10
புஃட் கலர் - ரெட்
செய்முறை:
பூசணிக்காயை கழுவி மேலே உள்ள கெட்டியான தோல் மற்றும் உள்ளே உள்ள விதைகளை நீக்கி கேரட் துருவிக் கொண்டு துருவிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு அடிகனமான கடாயை வைத்து துருவிய பூசணிக்காயை நீருடன் போட்டு வதக்கவும். சிறிது நீர் சுண்டியதும் பால் சேர்த்து வேகவிடவும். இடையில் ஒடித்த முந்திரி திராட்சையை தனித்தனியே சூடான நெய் விட்டு பொரித்துக் கொள்ளவும். இப்போது பால் வற்றி வெந்த பூசணிக்காயில் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிண்டவும். சிறிது நீரில் கலர் கலந்து அதில் ஊற்றவும். சர்க்கரை கரைந்த பின் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி ஒட்டாத அல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ருசியான அல்வா ரெடி.
பூசணிக்காய் பாசிப்பருப்பு அல்வா
தேவை:
பூசணிக்காய் – 2 கப் (துருவியது)
பாசிப்பருப்பு – ½ கப்
சர்க்கரை – 1 கப்
நெய் – 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் – 8
முந்திரி, திராட்சை – தலா 10
செய்முறை:
முதலில் சூடான வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வாசம் வரும்வரை கருகாமல் வறுத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். துருவிய பூசணிக்காயையும் அதே நீரில் தனியே வேகவைத்து வெந்த பாசிப்பருப்புடன் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி சர்க்கரை சேர்த்து கவனமாக மேலும் கிளறவும். ஏனெனில் பாசிப்பருப்பு எளிதில் அடி பிடிக்கும். சர்க்கரை கரைந்து எல்லாம் சேர்ந்து ஓரளவு கெட்டியானதும் நெய், பொடித்த ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக்கிளறி இறக்கி மேலாக நெய் (தேவைப்பட்டால்) ஊற்றி ஆறியதும் பரிமாறலாம். இது சத்துக்கள் நிறைந்த அல்வா. இதில் இரண்டு வகை பூகணிக்காய்களையும் வைத்து செய்யலாம்.
பூசணிக்காய் காரட் அல்வா
தேவை:
சிவப்பு பூசணிக்காய் – 1 கப் (துருவியது)
காரட் – 1 கப் (துருவியது)
பால் – 1 கப்
சர்க்கரை– 1 கப்
நெய் – 4 டீஸ்பூன்
ஏலக்காய் – 8
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
கலர் - 1 சிட்டிகை
செய்முறை:
அடிகனமான கடாயில் நெய் ஊற்றி மிதமான தீயில் துருவிய பூசணிக்காய், காரட்டை வதக்கி பால் சேர்த்து குக்கரில் அல்லது அதிலேயே வேகவிடவும்.( குக்கர் என்றால் ஒரு விசில் போதும். நேரம் மீதமாகும்). பால் சுண்டி காய்கறி நன்றாக வெந்ததும் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறி சர்க்கரை நன்கு கரைந்து அல்வா பதம் வந்ததும் நெய், ஏலக்காய் தூள் சேர்க்கவும். இறக்கும் முன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். கலர் தேவைப்பட்டால் சிட்டிகை நீரில் கலந்து சர்க்கரை சேர்க்கும்போது கலந்து கொள்ளலாம். குழந்தைகள் விரும்பும் அல்வா இது.