
கொள்ளுப் பொடி, கருவேப்பிலைப் பொடி, முருங்கைக் கீரைப் பொடி (மூலப்பொருட்கள் ஒன்று; சத்தான பொடி வகைகள் மூன்று) பொதுவான மூலப்பொருட்களை வைத்து மூன்று விதமான சத்தான, சுவையான கொள்ளுப் பொடி, கருவேப்பிலைப் பொடி மற்றும் முருங்கைக் கீரை பொடி செய்யலாம்.
தேவையான மூலப் பொருட்கள்:
கருப்பு உளுந்து - 50
வரமிளகாய் – பத்து (பெரியது)
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொள்ளுப்பொடி- செய்முறை:
கொள்ளு -- 100 கிராம்
ஒரு வாணலியில் அடுப்பில் குறைந்த தீயில் வைத்துக்கொண்டு கொள்ளை நன்றாக சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும். அதேபோல உளுந்து, கடலை பருப்பு இவற்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும், பின்பு கடைசியாக வரமிளகாய் சேர்த்து சிறிது உப்பு போட்டு வறுக்க வேண்டும். ஆறியதும் மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்கள்; உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு அருமையான பொடி இது. மூட்டு வலி கால் வலி போன்றவற்றை நீக்கி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.
கருவேப்பிலைப் பொடி செய்முறை:
கருவேப்பிலை – ஒரு கட்டு, கருவேப்பிலையை சுத்தம் செய்து நன்றாக கழுவிக் காயவைக்கவும். மேலே கூறிய மூலப்பொருட்களை தனித்தனியாக வறுத்து, பின் கருவேப்பிலையையும் வறுத்து, ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். சத்தான கருவேப்பிலைப் பொடி ரெடி
பயன்கள்; இளநரையை தடுத்து, நன்றாக கூந்தல் வளர்ச்சிக்கு துணைபுரியும். ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த இந்தப்பொடி சிறந்த கண்பார்வைக்கும், செரிமானத்திற்கும் ஏற்றது. நடுத்தர வயதினருக்கு நரையை தள்ளிப்போடும்.
முருங்கைக் கீரைப் பொடி:
முருங்கைக் கீரை – இரண்டு கட்டு முருங்கைக் கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து நன்றாக கழுவிக் காயவைக்கவும். மேலே கூறிய மூலப்பொருட்களை தனித்தனியாக வறுத்து, பின் முருங்கைக் கீரையையும் வறுத்து, ஆறவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். சத்தான முருங்கைக் கீரைப் பொடி ரெடி.
பயன்கள்:
இரும்பு சத்து நிறைந்த முருங்கைக்கீரை ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்யும். தலைவலி, தோல் நோய், வயிற்றுப் புண், வாய்ப்புண் போக்கும். உடல்சோர்வு நீக்கி உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.