

அல்வா என்றாலே கோதுமை மாவில்தான் நாம் சமைத்து சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாகப் பாசிப்பருப்பில் அல்வா செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். பாசிப்பருப்பில் அதிக அளவு புரதச்சத்து உள்ளதால் உடலின் தசை ஆரோக்கியத்திற்கு இது உதவுகிறது. நெய் மற்றும் சர்க்கரை சேர்ப்பதால் உடனடியாக உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
மேலும் பாசிப்பருப்பு மற்ற பருப்பு வகைகளைவிட எளிதில் ஜீரணமாக கூடியது. நெய் முக பளபளப்பிற்கு உதவுகிறது. இந்த அசோகா அல்வா திருவையாறு ஸ்பெஷல் இனிப்பு வகை.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 300 கிராம்
சீனி - 280 கிராம்
கோதுமை மாவு - 10 கிராம்
முந்திரி - 5 கிராம்
உலர் திராட்சை - 5 கிராம்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - தேவையான அளவு
ஃபுட் கலர் - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை நன்கு கழுவி வெயிலில் காயவைக்கவும். பாசிப்பருப்பு நன்கு ஈரப்பதம் இல்லாத அளவிற்கு காய்ந்தவுடன் ஒரு குக்கரில் சேர்த்து தேவையான அளவு நெய் ஊற்றி நன்கு வருத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு நீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் பாசிப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பேஸ்ட் ஆக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி கோதுமை மாவை நன்கு சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும் அதனுடன் பாசிப்பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறி கொடுக்கவேண்டும். பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு அல்வா பதத்தில் கலந்து கொடுக்க வண்டும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை நன்கு சிவந்து வரும்படி வறுத்து உலர் திராட்சையை நன்கு பலூன் பக்குவம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பாசிப்பருப்பை அல்வா பக்குவம் வரும் வரை நன்கு கிளறி கொடுக்கவேண்டும். தேவையான அளவு சிகப்பு நிற ஃபுட் கலர்,நெய்,ஏலக்காய் பொடி வறுத்து வைத்திருந்த முந்திரி, உலர் திராட்சை உடன் சேர்த்து நன்கு அல்வா பதத்தில் வரும் வரை கிளறி கொடுக்கவேண்டும். வெப்பம் குறைந்த அளவில் இருக்கவேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அசோகா அல்வா தயார். கடைகளில் அல்வா வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் நாம் வீட்டிலேயே செய்வது மிகுந்த ஆரோக்கியம் உடையதாக இருக்கும்.