புதிதாக சமைப்பவர்களாக இருந்தாலும் அல்லது சமையலில் நன்கு தேர்ச்சிப் பெற்றவர்களாக இருந்தாலும் சின்ன சமையல் குறிப்புகள் தெரிந்திருந்தால் அவசரமாக சுவையான சமையல் செய்ய பயன்படும்.
* தேங்காய் சட்னி என்பது காலையில் பலரும் அதிகமாக அரைத்து செய்ய கூடிய ஒரு சட்னி ஆகும். அந்த தேங்காய் சட்னி சுவையாக இருப்பதற்கு பாதி அளவு தேங்காய், பாதி கொத்தமல்லி இலைகளை சேர்த்து சட்னி செய்தால் சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.
* முட்டைகோஸ் சமைக்கும்போது அதன் வெள்ளை நிறம் மாறி சுவையும், மணமும் இல்லாமல் போய்விடும். அப்படி மாறாமல் இருப்பதற்கு ஒரு துண்டு இஞ்சியை சதைத்து சேர்த்து சமைப்பதால் அதன் மணம் மாறாமல் அப்படியே இருக்கும்.
* சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போது குக்கரில் தண்ணீர் விட்டு பருப்பை போட்டு தீயை அதிகமாக வைக்கும்போது கொதித்து நுரை மேலே பொங்கி வரும். அந்த நுரையை கரண்டியால் எடுத்து அகற்றிய பிறகு பூண்டு, காயம், மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், போட்டு குக்கர் மூடி போட்டு வேகவைக்கலாம். அவ்வாறு செய்வதால் வாயு தொந்தரவு ஏற்படாது.
* தோசை மாவு நன்கு புளித்து விட்டால் ஒரு கைப்பிடி அவலை ஊறவைத்து அத்துடன் சிறிது மிளகு, தேங்காய் துருவல் சேர்த்து பால் விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து அதனை தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பமாக ஊற்றினால் புளிப்பே இருக்காது. ஊத்தப்பம் மிகவும் மென்மையாக இருக்கும்.
* எந்த ஒரு இனிப்பு வகையை செய்ய விரும்பினாலும் சர்க்கரையின் அளவை குறைத்து கொண்டு அதற்கு பதிலாக கற்கண்டை பொடியாக்கி அதனை அந்த இனிப்பு வகையில் சேர்த்து கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும்போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறு என்று ருசியாக இருக்கும்.
* கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி, போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.
* பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.
* தக்காளி குருமா செய்யும்போது சிறிது சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும். குருமா வாசனையுடன், கெட்டியாகவும், சுவையாக வும் இருக்கும்.
* பொடி செய்யும்போது துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக் கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்பு பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும், வாசனை யாகவும் இருக்கும்.
* எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆறவைத்து பின்னர் செய்தால் சாத வகைகள் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
* காலிஃப்ளவர் சமைக்கும்போது அதில் ஒரு துளி அளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி பால் சேர்த்து சமைத்த அந்த காலிஃப்ளவர் ஆனது வெள்ளை கலர் மாறாமல் அப்படியே இருக்கும். பச்சை வாடை வராது.
* வெயில் காலத்தில் பெருங்காய கட்டி வாங்கி பயன்படுத்தினால் மேலும் கட்டி ஆகி உடைப்பதற்கு கஷ்டமாகி விடும். இப்படி கட்டி ஆகாமல் இருக்க பெருங்காயத்தில் பச்சை மிளகாயை காம்போடு அப்படியே போட்டு விட வேண்டும்.
இந்த சமையல் குறிப்புகளை தேவைப்படும்போது செய்து பயன்படுத்தினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.