பரீட்சை நேரத்தில் குழந்தைகள் படிப்பதில் மும்முரமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஞாபக சக்தியை தூண்டும் விதமாக உணவு வகைகளை செய்து கொடுப்பது நல்லது. வல்லாரைக்கு ஞாபக சக்தியை தூண்டும் திறன் அதிகம் என்பதை நாம் அறிவோம். அதனால் வல்லாரையை மாத்திரம் கடைந்து, சமைத்து கொடுக்கும்போது நாக்கில் அதன் விறுவிறுப்பு தன்மை அதிகமாக இருக்கும்.
சில குழந்தைகள் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆதலால் அவற்றை மற்ற கீரைகளுடன் கலந்து பொடியாக நறுக்கி தோசை மாவுடன் சேர்த்து தோசையாக, சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி ஆக, உப்புமா போன்ற வகைகளில் தாளித்து சேர்க்கலாம். வல்லாரைப் பருப்பு உசிலி, வல்லாரை மசால் வடை, பயத்தம் பருப்பு வகைகளில் சேர்த்தும் குழம்பாக, கூட்டாக செய்து கொடுத்து அசத்தலாம். மூளையை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.
வல்லாரையை பொன்னாங்கண்ணியுடன் சேர்த்து கூட்டு செய்யும் விதத்தைக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு- ஒரு கப்
தேங்காய் துருவல்- ஒரு கப்
சின்ன வெங்காயம்- 10
பச்சை மிளகாய்- 3
வரமிளகாய்-2
இஞ்சி -ஒரு துண்டு
பூண்டு பல்-4
எண்ணெய் ,உப்பு -தேவையான அளவு
கழுவி நறுக்கிய வல்லாரை கீரை- ஒரு கப்
நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை- ஒரு கப்.
சீரகம்-1ஸ்பூன்
தக்காளி-1
செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு ,சீரகம் தாளித்து, வரமிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். தக்காளியை அரிந்து சேர்க்கவும். நன்றாக வதங்கியவுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பு, கீரை வகைகளை சேர்த்து மஞ்சள் தூள் தூவி, அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல் ,பச்சை மிளகாய் இஞ்சி கலவை சேர்த்து, உப்பு போட்டு மூடி ஒரு விசில் வந்ததும் எடுத்து மசித்து குழைவான சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம். தோசை, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.
வல்லாரை மசால் வடை
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு , துவரம் பருப்பு தலா- அரை கப்
பொடியாக அரிந்த வல்லாரைக் கீரை -ஒரு கப்
வர மிளகாய்- 4
சோம்பு -ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை ,தனியா -அரிந்தது ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு -தேவைக்கு.
செய்முறை:
ஊற வைத்த பருப்புகளுடன் சோம்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் அரிந்த கீரை வகைகளை சேர்த்து உப்பு போட்டு பிசைந்து, வடைகளாகத் தட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்.