

கலவை சத்துமாவு தயாரித்து வைத்துக்கொண்டால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு சட்டென்று கஞ்சி வைத்துக் கொடுத்து அனுப்ப வசதியாக இருக்கும். கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்க்கு அது சிறந்த பலனைத்தரும். அவற்றினை நன்றாக பக்குவப்படுத்தி வைத்துக்கொண்டால் புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேகக்கூடிய பலகாரங்கள் செய்தும் அசத்தலாம். வித்தியாசமான ருசியுடன் சத்து நிரம்பிய உணவுப் பொருட்களை உட்கொள்வதை அனைவரும் விரும்புவர். அதன் செய்முறை விளக்கம் இதோ:
வடிமட்ட அரிசி, மூங்கில் அரிசி, கருப்பு கவுனி அரிசி, சம்பா கோதுமை, சிறுசோளம், ராகி கொள்ளு, குதிரைவாலி, வரகு, சாமை, திணை, கம்பு, பார்லி இவற்றை 2 கைப்பிடி அளவு எடுத்து நன்றாக க் கழுவி, நிழலில் காய வைக்கவேண்டும்.
நன்றாக காய்ந்ததும் மாவு மில்லில் கொடுத்து அரைத்து, அதன் சூட்டை ஆற்றி கொஞ்சம் கொஞ்சமாக வாணலியில் போட்டு அந்த மாவை வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவில் கொஞ்சமாக எடுத்து தேவையான அளவு தண்ணீர், பால் விட்டு கஞ்சி வைத்து ருசிக்கேற்ப சர்க்கரை, உப்பு சேர்த்து அருந்தலாம். அதில் தேங்காய் துருவல், வறுத்து உடைத்த முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, உடைத்த பாதாம் சேர்த்து பாயாசம் போலும் செய்யலாம். பசிக்கு ருசி சத்துக்கு சத்து. கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், வளரிளம் குழந்தைகள் என்று அனைவருக்கும் பிடித்தமான கஞ்சி இது.
இதே மாவில் தேவையான அளவு எடுத்து இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை செய்தும் அசத்தலாம். களி, கூழ் என்றும் செய்து கொடுக்கலாம். முறுக்கு பக்கோடா செய்யவும் பயன்படுத்தலாம்.
சிறிது உளுந்தை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து அதனுடன் இந்த மாவை கலந்து தோசை வார்க்கலாம். வெல்லம் கலந்து அப்பம் சுடலாம். ஆதலால் இது போன்று தேவையான அளவு அதிகமாக மாவை அரைத்து வைத்துக் கொண்டால் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நல்ல உடல் வலுவை காக்கலாம்.
-இந்திராணி தங்கவேல்
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here