காலிஃப்ளவர் எல்லா வயதினருக்குமான ஒரு உணவாகும். இதை தினசரி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெற்று நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும். இவற்றை நாம் வறுவல், கூட்டு, பொரியல் என சமைத்து ருசித்து வருகிறோம். பழங்காலத்தில் இருந்தே இந்த காய்கறி மக்களின் உணவுப் பட்டியலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்களை நாம் முழுமையாக பெறுவதற்கு இதை ஐந்து நிமிடத்திற்கு மேல் சமைக்க கூடாது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒரு கப் காலிபிளவர் முழுவதும் சாப்பிட்டாலும் நம் உடலுக்கு 30 கலோரி மட்டுமே கிடைக்கும் என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை தாராளமாக உட்கொள்ளலாம். இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதில்லை. இன்னும் பல நன்மைகள் காலிஃப்ளவர் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கிறது. எனவே காலிஃப்ளவர் பயன்படுத்தி வித்தியாசமான சூப் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
மிளகுத்தூள் - சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
பால் - 1 கப்
கோதுமை மாவு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 5 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை தண்ணீரில் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் பூண்டையும் பொடியாக நறுக்கி கலக்கி கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு காலிஃப்ளவர், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இதைத்தொடர்ந்து கடாயில் நெய் அல்லது வெண்ணை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும். பின்னர் அதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் கொஞ்சம் வெண்ணை விட்டு அரைத்த விழுது மற்றும் கோதுமை மாவு போட்டு கிளறவும். பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுத்ததாக வதைக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை கொதிக்க விட்டு இறுதியில் பால் சேர்த்து கிளறி விடவும்.
அவ்வளவுதான் சுவையான சத்தான காலிஃப்ளவர் சூப் தயார். இதில் கொஞ்சமாக மிளகுத்தூள் சேர்த்து, கப்பில் ஊற்றி பருகத் தொடங்கலாம்.