வாய் துர்நாற்றம் ஏற்படுவது எதனால்? வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்யணும்?

வாய் துர்நாற்றம் ஏற்படுவது எதனால்? வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்யணும்?

ராசரி ஐந்து நபர்களில் ஒரு நபருக்கு வாய் துர்நாற்றம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் உண்-ணும் உணவினால் வாய்ப் பகுதியில் கார அமிலத் தன்மையின் சமநிலை குறைவதால் ANAEROBIC GRAM  NEGATVIVE  பாக்டீரியாக்கள் உற்பத்தியாகின்றன. அப்போது வாய்ப்பகுதிக்குள் சல்பர் எனப்படும் கந்தக அமில வாயு வெளியேற்றப்படுகிறது. இயல்பாகவே அப்போது வாய் துர்நாற்றம் வெளிப்படுகிறது. வாய் துர்நாற்றமானது பொதுவாக நாம் பேசும்போது பிறருக்கு மேலும் அதிகமாகக் காட்டிக் கொடுத்துவிடும். முதலாவதாக பல், ஈறு, நாக்கு சம்பந்தப்பட்ட பிரச்னை இது. இரண்டாவதாக மூக்கு, மூச்சுக்குழாய், தொண்டை, நுரையீரல், உணவுக்குழல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றில் ஏற்படும் தொற்றுக்களினால் உருவாகும் பிரச்னை இது.

சொத்தைப் பல், அடிபட்ட பற்கள், பற்களுக்கு ரத்தம் சரிவர செல்லாதிருப்பது, பற்களில் காரை, ஈறுகளில் வீக்கம், நாக்கு மீது வெள்ளை படிதல் போன்ற காரணங்களினால் வாய் துர்நாற்றம் உருவாகிறது. குறிப்பாக நாக்கின் மீது 0.1 மி.மீ. - 0.2 மி.மீ. அளவுக்கு வெள்ளை படிதல் தடிமன் ஆகும்போது வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

மூக்கில் அழுக்கு தங்குதல், தொண்டையில் புண், சீழ் வருதல், மூச்சுக் குழாயில் புண் மற்றும் சீழ், நுரையீரல் பகுதியில் அடிக்கடி சளி பிடித்தல், சளி வெளியே வராமல் பல நாட்களாகத் தங்கியிருத்தல் போன்றதினால் ஏற்படும் வேதியியல் மாற்றத்தினாலும் வாய் துர்நாற்றம் வெளிப்படும். உணவுக்குழாயில் புண் ஏற்பட்டிருத்தல், உணவு சரிவர செரிக்காமல் இருத்தல், அஜீரணக் கோளாறு போன்றவற்றாலும் துர்நாற்றம் உருவாகும். சிறுநீரகத்தில் கொழுப்பு சார்ந்த பொருட்கள் வேதிவினை மூலமாக இறுதிப் பொருளாக வந்து ரத்தத்தில் கலந்திருப்பதாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இது மிகவும் இறுதி நிலை ஆகும்.

காலை எழுந்தவுடனும் இரவு படுக்கைக்குப் போகும் முன்பும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் தினசரி பல் துலக்க வேண்டும். அப்படிப் பல் துலக்கும்போது பிரஷ்ஷின் நார் முடிகள் பற்களின் மீது மட்டும்தான் பட வேண்டும். ஈறுகளின் மீது பிரஷ்ஷின் நார் முடிகள் பட்டுத் தேய்க்கவே கூடாது. ஈறுகள் மீதும் படுமாறு தேய்த்தால் ஈறுகளிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கும். வாய் துர்நாற்றத்துக்கு அதுவும் வழிவகுக்கும். பிரஷ் போட்ட பின்னர் நன்றாக வாய் கொப்பளித்துத் துப்ப வேண்டும். தண்ணீரை நாக்கின் அடிப்பகுதியில் சுழற்றியும், கன்னங்கள் உப்பிக் கொப்பளித்தும் துப்ப வேண்டும். நூற்றுக்குத் தொண்ணூறு நபர்களுக்கு மேலே தற்போது இந்த முறைகளில் பல் துலக்குவது கிடையாது என்பதுதான் உண்மை. பல் துலக்கிய பின்னர் நாக்கை சாதாரணமாக வழித்துச் சுத்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

அதிக புளிப்பு, அதிக கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நல்லது. உணவு உண்ட பின்னர் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். அதனால் பல் மற்றும் ஈறுகளில் தேங்கியிருக்கும் உணவுத்துகள்கள் வெளியேறிவிடும். வாய் சுத்தமாகும். வாய் துர்நாற்றம் கொண்டவர்கள் பச்சைக் கொத்தமல்லித் தழையினை நன்றாக மென்று திண்ணலாம். லவங்கம், ஏலக்காய், சோம்பு மூன்றையும் சேர்த்து வாயில் அடைத்து வைத்திருந்து மென்று சாற்றினை விழுங்கி அதன் சக்கையினைத் துப்பி விடலாம். புதினாச் சாறு இருபது மில்லி, எலுமிச்சைச் சாறு இருபது மில்லி, தண்ணீர் ஐம்பது மில்லி ஆகியவற்றைக் கலந்து தினசரி காலையில் இரு தடவை, மாலையில் இரு தடவை எனத் தொடர்ந்து கொப்பளித்துத் துப்பி வந்தால் வாய் துர்நாற்றம் நம்மிடம் தஞ்சம் புகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com