

கோடைகால விடுமுறை தொடங்கிவிட்டது. படிப்பில் இருந்து இடைவெளி எடுக்கவும், வீட்டில் நேரத்தை செலவிடவும் மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், கை பேசிகளில் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதற்கோ அல்லது ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கோ பதிலாக, இந்தக் கோடையை ஏன் அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடாது?
கோடை விடுமுறை ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும், பள்ளிப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட புதிய விஷயங்களை ஆராயவும் சரியான நேரமாகும். குழந்தைகள் தங்கள் விடுமுறையை அனுபவிக்கும் அதே வேளையில், திறன்கள், படைப்பாற்றல் மற்றும் பொறுப்புணர்வை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. நீங்கள் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினாலும், உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்க விரும்பினாலும், அல்லது உங்கள் ஓய்வு நேரத்தை சிறந்த முறையில் அனுபவிக்க விரும்பினாலும் இந்த கோடை விடுமுறை உங்களுக்கு சரியான நேரமாகும்.
ஆன்லைன் படிப்புகளை மேற்கொள்ளுங்கள்:
இணையம் தற்போது ஆன்லைன் படிப்புகளால் நிறைந்துள்ளது. திறனை வளர்த்தல், தொழில்துறை பயிற்சி என அனைத்துக்கும் தேவையான படிப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. உங்கள் ஆர்வம் மற்றும் தேவைக்கேற்ப புதிய திறனை கற்க கோடை விடுமுறை ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
புதிய மொழியை கற்றுக்கொள்ளுங்கள்:
கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, இணையம் வழியாக ஒரு புதிய வெளிநாட்டு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய மொழியை கற்றுகொள்வது புதிய கலாசாரத்தை தெரிந்துகொள்ள எதிர்பாராத சில இடங்களில் உதவும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பது அதிக தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும்.
மரம் நடுதல் மற்றும் தோட்டக்கலை:
தற்போது பூமிக்கு அதிக மரங்கள் தேவைப்படுகின்றன. கோடை விடுமுறையில் மரங்கள் நடுவதற்கு தேவையான விதைகளை எடுத்துகொண்டு நண்பர்களுடன் இணைந்து முயற்சி செய்து பாருங்கள். கோடை விடுமுறையின்போது மரம் நடுதல், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல் போன்ற செயல்களைச் செய்வது மிகவும் சுவாரஸ்யமானது. பூமி எவ்வளவு அழகானது என்பதையும், அதைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் என்பதையும் புரிந்துகொள்ள இந்த விஷயங்கள் உங்களுக்கு உதவுகின்றன. புதிய செடிகள் வளர உங்கள் கைகளால் உதவுவது, உங்கள் விடுமுறையைச் சிறப்பானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது.
தன்னார்வத்தொண்டு:
சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் அல்லது விலங்குகள் காப்பகங்களில் தன்னார்வத் தொண்டு செய்வது, வாழ்க்கையில் இரக்கத்தையும், அக்கறையையும் கற்பிக்கும். இது பள்ளிகள் கற்பிப்பதை விட வாழ்க்கையை பற்றி அதிகமாக போதிக்கும்.
எழுத்தாற்றலை மேம்படுத்துங்கள்:
மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் 15-30 நிமிடங்கள் பல்வேறு இலக்கிய வகைகளை வாசியுங்கள். வாசிப்பு மற்றும் எழுதும் திறன்கள் ஆரம்ப காலத்திலேயே வளர்க்கப்பட வேண்டிவை. இதற்கு கோடைகாலம் சிறந்ததாகும். கோடைக்கால அனுபவங்களை ஆவணப்படுத்தி, எழுதும் திறனை மேம்படுத்துங்கள்.
படம் வரைதல் :
உங்கள் குழந்தைக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருக்கலாம். அவர்களுடன் அமர்ந்து நீங்களும் சின்ன சின்னப் படங்களை வரைய ஊக்கப்படுத்தி கற்றுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும்போது மேலும் அவன் முறையாக கற்றுக்கொள்ளத் தொடங்குவான். இதனால் அவனது கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.
யோகா மற்றும் தியானம்:
யோகாவும், தியானமும் உங்கள் ஆற்றலைச் சரியான முறையில் பயன்படுத்த உதவுகின்றன. சுறுசுறுப்பாக இருக்க நீச்சல், யோகா அல்லது நடனத்தில் பங்கேற்க எளிய வகை யோகா மற்றும் சுவாசப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்வது உங்கள் உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது உங்கள் கவனத்தை மேம்படுத்தி, அமைதியாக இருக்க உதவுகிறது.
இசை வகுப்புகள்:
இசை வகுப்புகளில் பங்கேற்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். உங்களுக்கு விருப்பமான இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளலாம்; அல்லது பாடுவதையும் முயற்சி செய்து பார்க்கலாம். இந்த வகுப்புகள், உங்கள் ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியான தாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றன; இதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் கற்று மகிழ்ந்து, இன்பமான அனுபவத்தைப் பெறுகிறீர்கள்.
போட்டிகளில் பங்கேற்கவும்:
பெரிய பிரபலங்கள் சிறுவயதில் போட்டிகள், நிகழ்ச்சிகள் மூலமாகவே தங்கள் வாழ்க்கை பாதையை கட்டமைத்து கொண்டனர். உங்களுக்கு ஆர்வம் உள்ள உள்ளூர் போட்டிகள் அல்லது ஆன்லைன் போட்டிகளை தேடி பதிவு செய்து பங்கு பெறுங்கள்.
கலை மற்றும் கைவினை:
கலை மற்றும் கைவினை உங்கள் கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாக மாற்றும். வண்ணங்கள், காகிதம் மற்றும் எளிய கருவிகளைக் கொண்டு, நீங்களே அழகான பொருட்களை எப்படி உருவாக்குவது என்று கற்றுக் கொள்கிறீர்கள். வெட்டுதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் காகித வேலைகள் போன்ற செயல்பாடுகள் புதிய வழிகளில் சிந்திக்கவும் உங்கள் கற்பனையைப் பயன்படுத்தவும் உதவுகின்றன. கோடையில் இதைக் கற்றுக்கொள்வது உங்கள் நாட்களை மகிழ்ச்சியுடனும் படைப்பாற்றலுடனும் நிரப்புகிறது.
தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தி, நேரத்தை சரியாகத் திட்டமிடுவதன் மூலம் இந்த விடுமுறையை மறக்க முடியாத அனுபவமாக மாற்றலாம்.