மன அழுத்தக் கவலைக்கான 7 ஆச்சரியமான காரணங்கள்!

7 Surprising Causes of Stress Anxiety
7 Surprising Causes of Stress Anxiety
Updated on

பொதுவாக, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பலரின் குறிக்கோளாக இருக்கும். ஆனால், ஓரளவு சொத்துக்கள் வாங்கிய பின்பு கூட மனதில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல் சிலர் இருப்பார்கள். அவற்றுக்கான ஆச்சரியமான ஏழு காரணங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. முழுமைத்தன்மையை எதிர்பார்ப்பது: சிலர் எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு முழுமை தன்மையை எதிர்பார்ப்பார்கள். பாத்திரம் தேய்த்தாலும் சரி, வீடு துடைத்தாலும் அல்லது அலுவலக வேலை என்றாலும் அதில் முழுக்க முழுக்க 100 சதவிகிதம் பர்ஃபெக் ஷனை எதிர்பார்ப்பார்கள். அது கிடைக்காதபோது அவர்கள் வருத்தப்படுவார்கள்.

2. விளைவுகளை எதிர்நோக்குவது: எந்த செயலை செய்தாலும் முடிவுகளை அல்லது விளைவுகளை எதிர்நோக்கி கவலைப்படுவது சிலரின் வாடிக்கை. ஒரு உல்லாசப் பயணம் சென்றால் கூட இந்த பஸ் அல்லது ரயில் சரியான நேரத்திற்கு சென்று சேர்ந்து விடுமா என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்பது பயணத்தின் மகிழ்ச்சியை தொலைத்து விடும். ஜன்னல் வழியே இயற்கை காட்சிகளைக் கண்டு ரசித்தபடியே பயணிப்பதுதான் சிறந்தது.

3. நிலையற்ற தன்மையை மறுப்பது: வாழ்வில் எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டவை. கடந்த நிமிடம் போல இந்த நிமிடம் இருக்காது. தண்ணீரை கைகளில் இறுக்கிப் பிடித்தாலும் அது விரல்களின் வழியே நழுவிக் கொண்டு ஓடும். அது போலத்தான் இந்த வாழ்க்கையும். எதுவுமே நிலையில்லாதது. இந்த நிலையை புரிந்து கொண்டால் மனதில் அமைதி கிட்டும்.

4. கடந்த எதிர்காலத்தில் வாழ்வது: நடந்துபோன விஷயங்களை நினைத்து வருத்தப்படுவதும், இனிமேல் என்ன ஆகுமோ என்று கவலைப்படுவதும் தற்போதைய மகிழ்ச்சியை தொலைத்து விடும்.

இதையும் படியுங்கள்:
புதுச்சேரியின் சொர்க்க பூமி ஆரோவில்!
7 Surprising Causes of Stress Anxiety

5. ஈகோவுடன் வாழ்வது: சக மனிதர்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஈகோவை சற்றே தள்ளி வைக்க வேண்டும். பிறர் நம்மை மதிக்க மாட்டார்களோ என்று எண்ணி அவர்களை அடக்கி ஆள நினைப்பது அமைதியின்மைக்கு வழிவகுக்கும். அவர்களும் நம்மை போல மனிதர்கள்தான் என்று ஈகோவை தூக்கி எறிந்து விட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.

6. சுய அன்பு இல்லாதது: வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் கவலையும் மன அழுத்தமும் இருக்கிறது என்றால் அதற்கு சுய அன்பு இல்லை என்று அர்த்தம். எப்போதோ செய்து விட்ட தவறுகளை நினைத்து வருந்தி நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொள்வது போல அதை நினைத்து வருத்தப்படுவது தவறு. தவறு செய்வது மனித இயல்பு என்று புரிந்து கொண்டு உங்களை நீங்களே மன்னித்து அன்பு பாராட்ட வேண்டும்.

7. எல்லா நேரமும் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பது: வாழ்க்கை என்றால் இன்ப, துன்பம் வருவது சகஜம். எல்லா நாட்களிலும் சுமுகமான வானிலையை எதிர்பார்ப்பது சாத்தியம் இல்லை. அவ்வப்போது மழை பெய்யும். கடுமையாக வெயில் அடிக்கும். அதே நேரத்தில் அழகான வானவில்லும் எட்டிப் பார்க்கும். அது போலத்தான் வாழ்க்கையும்.

எனவே, மேற்கண்ட விஷயங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை தூக்கி எறிந்து விட்டு, உங்களது வாழ்க்கையை சந்தோஷமாகவும் மன அமைதியுடனும் அனுபவிக்கத் தொடங்குங்கள்.

logo
Kalki Online
kalkionline.com