கரப்பான் பூச்சி மற்றும் பல்லித் தொல்லையிலிருந்து விடுபட ஒரு எளிய தீர்வு!

Lizard and cockroach
Lizard and cockroach
Published on

வீட்டில் கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகள் நடமாட்டம் என்பது பலருக்கும் பெரும் தலைவலியாக இருக்கும். குறிப்பாக சமையலறையில் இவை ஏற்படுத்தும் அசௌகரியங்களும், சுகாதாரக் குறைபாடுகளும் எரிச்சலைத் தரும். இரவு நேரங்களில் சுவரில் ஊறும் பல்லிகளையும், உணவுப் பொருட்களின் மீது அலைபாயும் கரப்பான் பூச்சிகளையும் பார்த்தால் மனம் படபடக்கும். இவற்றை கட்டுப்படுத்த ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த தயங்குபவர்களுக்கு, இயற்கையான மற்றும் பயனுள்ள ஒரு தீர்வு இதோ‌.

இந்தத் தீர்வுக்குத் தேவையான பொருட்கள் நம் வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு மட்டுமே. இவற்றில் உள்ள சில வேதிப் பொருட்கள், இந்த தொல்லை தரும் உயிரினங்களுக்கு ஒவ்வாதவை. அவற்றின் கடுமையான காரத்தன்மையும், நெடியும் கரப்பான் பூச்சிகளையும், பல்லிகளையும் நமது வீட்டின் பக்கம் அண்டவிடாது.

இந்த அற்புதத் திரவத்தைத் தயாரிக்க, முதலில் சில நல்ல காரமான பச்சை மிளகாய்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும், இரண்டு அல்லது மூன்று பல் பூண்டையும் நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு இரண்டையும் சேர்க்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை இந்த கலவையை ஊறவிட வேண்டும். பச்சை மிளகாய், பூண்டில் காப்சைசின் மற்றும் அல்லிசின் ஆகிய இயற்கையான கூறுகள், தண்ணீரில் நன்கு கலந்து ஒரு சக்திவாய்ந்த விரட்டும் திரவத்தை உருவாக்கும்.

அவை நன்கு ஊறிய பிறகு, இந்த திரவத்தை ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டி மூலம் வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். பழைய ஷாம்பு பாட்டில் அல்லது வேறு எந்த ஸ்ப்ரே பாட்டிலையும் பயன்படுத்தலாம். இந்த திரவத்தை, கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் அதிகம் காணப்படும் இடங்களில், குறிப்பாக சமையலறை சுவர்கள், அலமாரிகளின் உட்பகுதி, சிங்க் பகுதிக்கு அடியில், மற்றும் வீட்டின் மூலை முடுக்குகளில் தாராளமாக தெளிக்கலாம். இரவு நேரங்களில் தெளித்தால் அதிக பலன் கிடைக்கும். இதன் விளைவை உடனடியாகக் காணலாம், அவை அந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியேறிவிடும்.

இந்தத் தீர்வு இயற்கையானது என்பதால், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை. இருப்பினும், இந்த திரவம் குழந்தைகளுக்கு எட்டாதவாறு பாதுகாப்பான இடத்தில் வைப்பது அவசியம். இந்த எளிய, இயற்கையான வழிமுறையைப் பின்பற்றி உங்கள் வீட்டை கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகளின் தொல்லையிலிருந்து விடுவித்து, சுகாதாரமான சூழலைப் பெறுங்கள். உங்கள் வீடு இனி கரப்பான் பூச்சி இல்லாத சுத்தமான இடமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com