முற்காலத்தில் தானியங்களை அழிக்கும் பெருச்சாளிகளை ஒழிப்பதற்கு எகிப்தியர்கள் பூனைகளை வளர்த்தனர். தானியங்களை காப்பாற்ற வேண்டுமே என்பதற்காக வளர்க்கப்பட்ட பூனைகள், தற்போது சமைத்த உணவினை சாப்பிடுகிறபோது சங்கடப்படுகிற மனிதர்கள், உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். இன்றும் நம்மிடையே தோட்டத்தில் இருக்கும் எலிகளை பிடிப்பதற்காக பூனைகளை விரும்பி வளர்ப்பவர்களும் உண்டு.
ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே பூனைகளை வீட்டு பிராணிகளாகப் பழக்கியவர்கள் எகிப்தியர்கள்தான். இன்றைக்கும் உலகம் முழுவதும் நாம் பார்க்கிற பூனைகள் எகிப்தின் தென்கோடியில் இருந்து வந்தவைதான்.
பூனை கடவுளுக்கு ஒரு முறை விழா கொண்டாடியபோது எகிப்தில் ஐந்து லட்சம் மக்கள் திரண்டதாக கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரடேடஸ் குறிப்பிடுகிறார். எகிப்தில் உள்ள காப்டிக் கிறிஸ்தவர்களால் பூனையை வழிபடுவதை விட முடியவில்லை. கிளியோபாட்ராவே பூனைகளை பெரிதும் விரும்பி இருக்கிறார் என்று தெரியவருகிறது.
பேபர்ஸ் என்கிற அரசன் பூனைகளுக்காக ஒரு பழத்தோட்டத்தையே உருவாக்கி இருக்கிறான். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் மாவீரன் பிரடரிக் தனது ராணுவ கிடங்குகளை காப்பாற்ற பூனைகளைத்தான் பழக்கி வைத்திருந்தான். அறிஞர் சாமுவேல் ஜான்சன் போன்றவர்கள் பூனைகளை வளர்ப்பதில் பெரும் விருப்பத்தோடு இருந்தார்கள்.
கருப்புப் பூனையோடு கப்பலில் போவது நல்ல சகுனம் என்று ஆங்கில மாலுமிகள் நம்பினர். கடலில் ஆபத்து வந்தால் முதலில் அவர்கள் பூனைகளையே காப்பாற்றினர். பூனை குறுக்கே வந்தால் அந்த நாள் இங்கிலாந்தின் நல்ல சகுனம். இந்த நாள் இந்தியாவில் கெட்ட சகுனம் ஆக இருக்கிறது. பூனைகள் இறந்துபோனால் தூக்கம் கொண்டாடுகிற வழக்கம் எகிப்திலே உண்டு. பூனைகளை கூட இறந்த போன பிறகு மம்மிகளாக எகிப்திர்கள் பதப்படுத்தி இருக்கிறார்கள்.
எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் ஒரு பூனை ஐந்து குட்டிகளைப் போட்டிருந்தது. அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். ஆனாலும், மழையின் காரணமாக இரண்டு குட்டிகள் இறந்து போய்விட்டது. அது அவருக்கு துக்கத்தை வரவழைத்தது. அன்று முழுவதும் மிகவும் சோகமாகவே இருந்தார். பிறகு அது ஏதோ தோஷம்தான் என்று எண்ணி, அவர் 50 பொட்டலங்கள் சாப்பாடு வாங்கி சாலை ஓரத்தில் வசிக்கும் வறியவர்களுக்கு வழங்கி விட்டு வந்தார். பிறகுதான் அவருக்கு மனம் சமாதானம் ஆகியது.
எப்படி இருந்தாலும் நாய்கள் மனிதர்களை நேசிக்கின்றன. பூனைகள் வீடுகளை மாத்திரமே நேசிக்கின்றன. என்ன இருந்தாலும் நாய்க்கு இல்லாத திருட்டு குணம் பூனைக்கு வந்து விடுகிறது. இதனால்தான் நாய்களை அதிகம் விரும்பி வளர்க்கிறார்கள். பூனைகளை கெட்ட சகுனமாக நினைத்து ஒதுக்கி விடுகிறார்கள் போலும்.
'உயிர்களிடத்திலே அன்பு' என்பது நாம் அறிந்ததே. மற்ற உயிர்களை நேசிப்பதைப் போல் பூனையையும் நேசிப்போம்!