நிபந்தனையற்ற தியாகத்தை ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டிய தினம்!

அன்னையர் தினம் (10-05-2026) ஒரு காரணம் மட்டுமே; எந்நாளும் நம்மை உயிராகக் காத்த அம்மாவின் கனவுகளையும் சிறு ஆசைகளையும் நினைவுகூரும் பொறுப்பு!

mother's day
mother's day
Updated on

னக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத துறவியின் மனப்பக்குவமும், எந்நேரமும் பிள்ளைகளைப் பற்றியே சிந்தனை என அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை. ஒரு நாள் மட்டுமல்ல; ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான் அன்னையர். பெண்கள் வீட்டில் பல உறவுகளில் நம்மை வழி நடத்தினாலும், அம்மா என்ற உறவு மிகவும் உன்னதமானது. எல்லா உறவுகளையும் ஒன்றிணைப்பவள் இவள்தான். அம்மாவின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மனிதப் பிறவிக்கு மட்டுமல்ல, உலக உயிர்கள் அனைத்திற்குமே அன்னை தான் பிரதானம். "அம்மா" என்ற வார்த்தைக்குள்தான் அகில உலகமே அடங்கியுள்ளது. அன்னையர் தினம் அமெரிக்காவில் தான் உருவானது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக கொண்டாடும் வழக்கம் உள்ளது.

அம்மா என்றால் அன்பு. நிபந்தனையற்ற பாசத்தின் ஊற்று. அவளுடைய மென்மையான ஸ்பரிசம் நம்மை முழுமையாக்குகிறது. தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்தும் அம்மாவுக்காக எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு நாளைக்கு சிறிது நேரமாவது அவளுடன் செலவிட மறக்கவேண்டாம். அவளுக்காக ஒரு நாளை கொண்டாடி விட்டு போவதில் உடன்பாடில்லை தான். ஓய்வில்லாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடன் இருக்கும் அம்மாக்களுக்காக ஒரு தனி நாளை ஒதுக்கி அவர்களுக்கான கொண்டாட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பது ஒருவிதத்தில் சரியாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

தாயின் கருவறைக்குள் 280 நாட்கள் வளரும் சிசுவின் உயிருக்கு தாயின் ரத்தத்தில் உள்ள சத்துகள்தான் தொப்புள் கொடியின் மூலம் கிடைக்கிறது. ஊனாகி, உடலாகி, உயிராகி, உயிர் தந்த அன்னையை போற்றுதல் சிறப்பன்றோ!

இதையும் படியுங்கள்:
மணப்பெண்களே!மாப்பிள்ளையிடம் நீங்க அவசியம் கேட்க வேண்டிய 8 கேள்விகள்...

mother's day

அம்மாக்கள் எப்போதும் பேராசை நிரம்பியவர்களாய் தான் இருப்பார்கள். அதிலும் பெண் பிள்ளையைப் பெற்ற அம்மாக்களுக்கு கனவுகள் எல்லை கடந்ததாகவே இருக்கும். தான் பார்த்த கஷ்டங்களை அவள் பார்க்கக் கூடாது. தனக்கு கிடைக்காத எல்லாமும் கூட தன் மகளுக்கு கிடைக்க வேண்டும் என மிகுந்த பேராசைக் கொண்டவளாய் இருப்பாள். அப்படிப்பட்ட அம்மாவை, தன் வாழ்க்கை முழுமையும் நமக்காகக் கொடுத்த அம்மாவை, நாம் கொண்டாட மறந்துவிடுகிறோம். அவளின் ஆசைகளைத் தெரிந்துகொள்ள மறுத்து விடுகிறோம். அவளின் கவலைகள் என்ன என்பதை முகத்தைப் பார்த்து புரிந்துகொள்ள தவறிவிடுகிறோம்.

அன்பையும், உலகத்தையும், நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் முதல் ஆசிரியை நம் அம்மா தான். அம்மாக்களின் விட்டுக் கொடுத்ததில்தான் உலகமே அழகாகிறது. நம்முடைய ஒவ்வொரு சிரிப்பிலும் அம்மாக்களின் ஏதோ ஒரு விட்டுக் கொடுத்தல் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு நாளைக்கு ஆயிரம் கேள்விகளைக் கேட்டு நம்மை எரிச்சலடையச் செய்கிறாள் என்று கோபப்படும் நாம், அவளைவிட்டால் நம்மை யாரும் இப்படி அன்புடன் விசாரிப்பதோ, கேள்விகள் கேட்பதோ, அக்கறை காட்டுவதோ, நமக்காக வாழ்வதோ உண்மையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட அம்மாவின் சின்ன சின்ன ஆசைகளைக் கூட காது கொடுத்து கேட்க வீட்டில் யாரும் தயாராக இருப்பதில்லை.

உலகிலேயே அதிகமான அர்த்தத்தை தரக்கூடிய ஒரே வார்த்தை அம்மா என்ற சொல்தான். தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்யத் துணியும் அம்மாக்களைத்தான் நாம் பலவீனமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவர்களின் பலவீனம் அன்பு மட்டுமே. அம்மாக்களை கொண்டாட வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
கண்டுகொள்ளாத கணவனை வழிக்குக் கொண்டு வர இதோ 5 ரகசிய வழிகள்!

mother's day

அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டாலே போதும். அம்மாவின் உலகத்தில் அன்பைத் தவிர வேறு எதற்கு இடம் இல்லை. இந்த அன்னையர் தினத்தில் ஒரு சாரி அல்லது தேங்க்ஸ் சொல்லி அவர்களை கட்டி அணைத்தாலே போதும். அவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீரை சிந்த காத்துக் கொண்டிருக்கும்.

அம்மாவைக் கொண்டாட நாள் தேவையில்லைதான். என்றுமே அவள் கொண்டாடப்பட வேண்டியவள்தான். இருந்தாலும் இன்று கூடுதலாக அவளை மனம் கோணாமல் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ள முயலுவோம்!

இவ்வுலகை அன்பால் இயக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

logo
Kalki Online
kalkionline.com